அது கூடுகட்டும் அழகே தனி...காய்ந்த புல்,சின்ன வைக்கோல், ஏதோ ஒரு செடியின் காய்ந்த சருகு, கொஞ்சம் இறுக்கமான சின்ன குச்சி என்று எதாவது ஒன்றை அலகில் வைத்துக்கொண்டு ஆள் நடமாட்டம் குறையும் நேரம் பார்த்து முற்றத்தின் இரும்பு கம்பியிலோ, சுவர் ஒட்டி வளர்ந்திருக்கும் வேப்பமரத்து மூன்றாவது கிளையிலோ சுறுசுறுப்பாக தலையை ஆட்டி ஆட்டி சின்னக்கண்களோடு பார்த்துக்கொண்டிருக்கும்...
பாட்டி வெற்றிலைப்பாக்கு இடிக்கும் சத்தமோ, மோர் சிலுப்பும் சத்தமோ, வியர்வையோடு தாத்தா வந்தமரும் சத்தமோ, ஜெனரேட்டர் இஞ்சின் ஓடும் சத்தமோ, ட்ராக்டர் ட்ரெய்லர் மாட்டும் சத்தமோ அதை தொந்தரவு செயததாக நினைவில்லை...தான் உண்டு தன் வேலை உண்டு என்று கருமமே கண்ணாக கூண்டு கட்டுவது, தான் என்ன வேலை செய்கிறோம் என்று இந்த மனிதனுக்கு தெரியுமோ தெரியாதோ என்பது பற்றி கவலை இன்றி கூட்டின் வாசலிலோ, உள்ளோ அமர்ந்திருப்பது...
முட்டை போட்டு குஞ்சு வைத்து, அந்த குஞ்சுகளுக்கு எங்கிருந்தோ பிடித்துவந்த புழுவோ, பூச்சியோ, கீச்ச் கீச்ச் சப்தங்களுக்கு மத்தியில் ஊட்டி, வெளியே கோழிகளுக்கு போட்டிருக்கும் கம்போ கேவுறோ தனக்கொன்று பொறுக்கிக்கொண்டு உத்திரத்தில் சத்தமிட்டுக்கொண்டோ, சில நேரங்களில் சத்தமில்லாமலோ உட்கார்ந்திருக்கும்...
இன்றைக்கு அடைக்கலங்குருவிகள் இல்லை...
ஆமாம்...அழிக்கப்பட்டுவிட்டன...தானாக அல்ல...அழித்தொழிக்கப்பட்டுவிட்டன...
ஆச்சர்யமாக இருக்கிறதா என்ன ? ஆமாம். அதுதான் உண்மை.
நீங்கள் கடைசியாக அடைக்கலங்குருவியை எப்போது பார்த்தீர்கள் ? கிராமமோ, நகரமோ...மனிதர்களை தன்னுடைய தோழர்களாக நினைத்து, அவர்களிடம் அடைக்கலம் தேடிவந்தவை இந்த அடைக்கலங்குருவிகள்..
மனிதன் கட்டும் வீட்டில் நாமும் நமது வீட்டை கட்டிக்கொள்வோம்...அவனால் நமக்கு தீங்கில்லை..நன்மையே..என்று அதன் சின்ன உள்ளத்தால் சிந்தித்து மனிதனிடம் அடைக்கலம் தேடிவந்ததனாலேயே இதன் பெயரை அடைக்கலம் குருவிகள் என்று அழைத்தோம்...
இன்றைக்கு அதே மனிதன் அடைக்கலங்குருவிகளை, வேரோடு, வேரடி மண்ணோடு அழித்தொழிக்கும் பணியின் இறுதிக்கட்டத்தை நெருங்கிட்டான்...எப்படி என்று கேட்கிறீர்களா ?
புதிர் வைக்கும் எண்ணம் இல்லை எனக்கு....நான் நெஞ்சார ரசித்து பார்த்த அடைக்கலம் குருவிகளை இனிமேல் பார்ப்பேனா என்ற கேள்வி கத்தி போல் இதயத்தை ஊடுருவித்தாக்குகிறது...
ஆம்...அடைக்கலம் குருவிகள் ஆண்மையிழந்துவிட்டன...இனி உங்கள் வீட்டில் அடைக்கலம் குருவி கூடுகட்ட வாய்ப்பில்லை...முட்டையிடவோ குஞ்சு பொரிக்கவோ வாய்ப்பில்லை...
இயற்கை உரங்களை விடுத்து அதிக மகசூலுக்காக செயற்கை உரங்களை மனிதன் பயன்படுத்த ஆரம்பித்தது சரிதான்...ஆனால் இப்போது உரங்கள் இட்டும் அதன் மேலே அமர்ந்து பயிர்களை நாசம் செய்யக்கூடியதாக பூச்சிகள் திடம் பெற்றுவிட்டன...இதனால் தமிழக விவசாயிகள் அதிக வீரியம் உள்ள உரங்களை கடந்த அய்ந்தாண்டுகளாக பயன்படுத்த தொடங்கி, அதன் மூலம் புல், பூண்டு, வைக்கோல் என்று எல்லா தாவரங்களிலும் அதன் பாதிப்பு...இதன் மூலம் பொதுவாக கிராமங்களில் இருக்கும் அடைக்கலம் குருவிகள் இனவிருத்தி செய்யும் தகுதியை இழந்துவிட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன...

ஆக இனவிருத்தி செய்யமுடியாமல் போன அடைக்கலங்குருவிகள், அங்கொன்றும் இங்கொன்றுமாக வாழ்ந்து, நகரமயமாக்கலில் அதன் சிறிய உணவு தானிய இருப்பும் விஷமாகிப்போன நிலையில் ஒவ்வொன்றாக அழிந்துவிட்டன. இனி அடைக்கலங்குருவிகளின் பொம்மைகளைத்தான் நாம் நம்முடைய பிள்ளைகளுக்கு கொடுக்கமுடியும் போலும்..

இந்த கட்டுரையை எழுதும்போது கீச் கீச் என்று எங்கோ ஒரு ஓசை...அது அடைக்கலம் குருவியாக கண்டிப்பாக இருக்கக்கூடும்...இனிவரும் சந்ததிகள் இந்த ஓசையை கேட்கமுடியாமலே கூட போய்விடக்கூடும்...!!! மனது கனமாகிறது...!!!!!!