செந்தழல் ரவி : தல இருக்கீங்களா ?
எக்ஸ் : ம் சொல்லுப்பா. என்ன மேட்டர் ? ரொம்பநாளா ஆளை காணோம் ?
செந்தழல் ரவி : கொஞ்சம் பிஸி. அதை விடுங்க. அந்த பெரிய எழுத்தாளர் இன்னொரு எழுத்தாளரோட கதையை சுட்டுட்டாராமே ? அந்த மூலக்கதையை நீங்க படிச்சிருக்கீங்கன்னு கேள்விப்பட்டேன் உண்மையா ?
எக்ஸ் : எங்கப்பா பெரிய புத்தக சேகரிப்பாளர்னு தெரியும்ல ? அவர்ட்ட முடவன் வளத்த வெள்ளைப்புறா இருந்தது. ஒருமுறை போஸ்ட் கார்டு கூட போட்டார் எழுதின எழுத்தாளருக்கு.
செந்தழல் ரவி : அதை கேள்விப்பட்டேன். ஆனா பின் தொடரும் நிழலின் குரல் நீங்க எழுத்துகூட்டியிருக்கீங்கன்னு சொன்னாங்க. அது உண்மையா. ?
எக்ஸ் : ஆமாம். நான் அவரோட பெரிய ரசிகனாச்சே. படிக்காமே இருப்பேனா ?
செந்தழல் ரவி : யோவ் அப்ப பட்டுனு மேட்டரை போட்டு உடை. சுட்டாரா இல்லையா ?
எக்ஸ் : ரவி என்ன காமெடியா ? அது எத்தனை பக்கம் ? இது எத்தனை பக்கம் ? 26 எங்கே ? 700 எங்கே ? வடிவம் ஒன்னா இருக்குது அப்படீங்கறதுக்காக உருண்டையா இருக்கறது எல்லாம் பந்தா ?
செந்தழல் ரவி : இல்லீங்ணா. துரத்தப்பட்ட தொழிற்சங்கவாதி. குடிகாரன். கண்டெடுக்கும் நோட்டு புத்தகம், கதைக்குள் கதை, அதுக்குள்ள கதை எக்ஸெட்ரா எக்ஸட்ரா எக்ஸட்ரா ?
எக்ஸ் : எல்லா தொழிற்சங்கத்துலயும் எவனையாவது துரத்திக்கிட்டே தான் இருக்காங்க. எல்லாரும் குடிக்கறான். இதெல்லாம் ஒரு ரிசம்பிள்னஸா ? நெடுஞ்சாலையில் பைக் ஆக்ஸிடெண்டை வெச்சு ஒருத்தன் கதை எழுதினா, வேற யாரும் நெடுஞ்சாலையில வர்ர பைக் ஆக்ஸிடெண்டை வெச்சு கதை எழுதவே கூடாதா ? அப்படி இருந்தா அ ஆ ஈ ஈன்னு இருக்க எழுத்து கூடத்தான்யா காப்பி.
செந்தழல் ரவி : தல. இது மாதிரி க்ளோபல் ரிசம்பிள்னஸை சொல்லலை. குறிப்பிட்ட ஒரு வடிவம். கதைக்குள் கதை. அதுக்குள் கதை. அந்த மாதிரியான வடிவ ஒற்றுமை ஒரு இண்டலக்சுவல் ப்ராப்பர்ட்டி இல்லையா ? (அதான் அறிவார்ந்த சொத்துடைமை)
எக்ஸ் : ம்க்கும். கிழிஞ்சது. முதல்ல, ஒன்னு சொல்லு. ஜெ மாதிரி ஒரு மண்டை சுட்டுத்தான் கதை எழுதனுமா ? தும்முறதை வெச்சே பதினைஞ்சு பக்கம் எழுதுற ஆளுக்கு 13 வருசத்துக்கு முன்னாடி வந்த ஒரு படைப்பை சுடவேண்டிய தேவை என்ன ?
செந்தழல் ரவி : தல. இப்ப அதுவா பிரச்சனை ? ஜெமோவின் கூர்மையான எழுத்தாற்றல், உள் ஒளி, யதோ யதோ கவாசாகி அதோ அதோ மிட்சுபிஷி, தத்துவம், இலக்கியம், இசை, நடை(கை)ச்சுவை இது பத்தி இப்ப நான் கேட்கலையே ? அடிச்சாரா இல்லையா , அதை மட்டும் சொல்லுங்க போதும்..?
எக்ஸ் : ரெண்டு படைப்பையும் படிச்சவன் என்ற முறையில் இல்லை என்று எளிதாக சொல்லலாம். அதுவும் இல்லாம இலக்கிய வட்டத்தில் இதனை எளிதாக கண்டுகொள்வார்கள் என்று கூட தெரியாத முட்டாளா அவர் ? இது வெறும் வெத்து பப்ளிஸிட்டி ஸ்டண்ட். எந்திரன் கதையை எட்டுபேர் சொந்தம் கொண்டாடலையா ? அப்படி சொந்தம் கொண்டாடுபவர்கள் எல்லாம் என்ன ஜப்பான்ல சிலிக்கான் சில்லை புரட்டி போட்டு ரோபோவா தயாரிக்கறானுங்க ? தக்காளி தீபாவளி மலருக்கு கதை எழுதறவங்க தானே ? டென்ஷனாயிடுவேன் நான்.
செந்தழல் ரவி: தல அப்படி பார்த்தா எந்திரனும் ரெண்டு மூனு இங்கிலீசு ரோபோ படத்தோட காப்பி தானே ? ஷங்கர் என்ன சிலிக்கான் வேலியில மேயற ஆடா ? இல்லை சூப்பர் கம்பூட்டர் சைண்ட்டிஸ்டா ? அதை விடுங்க ராஜேஷ் குமார் எழுதின ஆயிரத்தி நானூனு நாவல்ல இன்னைக்கு வர்ர எத்தனை படங்களோட பாதிப்பு இருக்கு ?
எக்ஸ் : ராஜேஷ் குமாரை எல்லாம் நாங்க இலக்கியவாதி ஆட்டத்துல க்கறதில்லையேப்பா.
செந்தழல் ரவி : என்னாது ராஜேஷ்குமார் இலக்கியவாதி இல்லையா ? உங்க கும்பல் பாலகுமாரனையும் ஒத்துக்கமாட்டேங்குது. ஏங்ணா கமர்ஷியல் ரைட்டர்ஸை ஆட்டத்துல சேக்கமாட்டேங்குறீங்க ? அப்படி பார்த்தா சுஜாதா கூட கமர்ஷியல் ரைட்டர்தானே ?
எக்ஸ் : அது இல்லை ரவி
செந்தழல் ரவி : என்ன அது இல்லை இது இல்லை. சிவகாசி எஸ் விஜயன் காமிக்ஸ் போட முடியாம முடங்கியபோது ஒரு பெரிய க்ரூப் ராஜேஷ் குமாரை படிக்கலையா ?
எக்ஸ் : ட்ரெயின்ல போகும்போது வாட்டர் பாட்டிலோட சேர்த்து வாங்குற பாக்கெட் நாவலை எப்படிய்யா இலக்கியம்னு ஒத்துக்க முடியும் ?
செந்தழல் ரவி : அண்ணே சும்மா டகுல்பாஜி காட்டாதீங்க. இலக்கியம்னு ஒத்துக்கவேண்டாம். இலக்கியவாதின்னு ஒத்துக்கோங்களேன். பதினைஞ்சு வருசத்துக்கு முன்னாடியே சி.பி.யுன்னா செண்ட்ரல் ப்ராஸஸிங் யூனிட்னு பாக்கெட் நாவல்ல கொண்டுவந்தவர். இன்னைக்கு நடக்கற நியூட்ரினோ ஆராய்ச்சி வரை பாமர மக்களுக்கு புரியற மாதிரி சொல்லிக்கிட்டிருக்கார். இந்த சிறுபத்த்திரிக்கை, கையெழுத்து இதழ் கும்பல் வெகுஜனத்தோட ஒட்டாத மனநோயாளிங்கன்னு ரொம்பநாளா நான் நினைச்சுக்கிட்டிருந்தேன்.
எக்ஸ் : ரவி, கமர்ஷியல் ரைட்டிங் ஒரு அளவுக்கு மேல மனதுக்குள்ள நுழையமுடியாது.
செந்தழல் ரவி : அண்ணே, உள்ளொளி, புற ஒளி, நித்யானந்த யதி, அகத்தேடல் எக்ஸெட்ரா எல்லாம் பாமர மக்களோட வாசிப்புல இருந்து கிலோமீட்டர் கணக்கில இருக்கறது உண்மைன்னு ஒத்துக்கோங்க.
எக்ஸ் : சரி நீ ஜே ஜே சில குறிப்புகள் படிச்சிருக்கியா ?
செந்தழல் ரவி : ஆங் நிறைய.
எக்ஸ் : நிறையன்னா ?
செந்தழல் ரவி : முதல் நாலு பக்கத்தை பதினாலுமுறை.
எக்ஸ் : டேய்...
செந்தழல் ரவி : சரி நாம தேவையில்லாம பல மேட்டருக்கு போறோம்னு நினைக்கறேன். பவா செல்லத்துரையோட போனப்போ பாலகுமாரனை விசிறி சாமியார் இக்னோர் செய்ததும் வேணாம், ஜெவை கூப்டு உக்கார வெச்சதும் வேணாம், உத்தம தமிழ் எழுத்தாளருக்கும் சாருவுக்கும் உள்ள சண்டையும் வேண்டாம். நீங்க பின் தொடரும் நிழலின் குரல் காப்பியா இல்லையான்னு சொல்லுங்க. ஆட்டைய க்ளோஸ் பண்ணுவோம்.
எக்ஸ் : தம்பி. சும்மா விவாதம் செய்யறதுக்காக இஷ்டத்துக்கும் டகுல்பாஜி உட்டு திசை திருப்பாத.. கடைசியா சொல்றேன் கேட்டுக்கோ. ஜெமோ பி.தொ.நி.குரலில் கையாண்டிருக்கும் விரிவான மீபுதின டெக்னிக், அதில் வரும் அங்கத நாடகம், கம்யூனிஸ்டு மேட்டர்கள் எல்லாம் அவரே அனுபவித்தது. அவரும் தொழிற்சங்கத்தில் இருந்திருக்கிறார் தெரியுமா ?
செந்தழல் ரவி : அண்ணே. மாமல்லனும் கவர்மெண்ட் ஆள்தானே ? அவரும் தொழிற்சங்கத்தில் எல்லாம் செயல்பட்டிருப்பார்தானே ? மேட்டர் என்னன்னா எழுதப்பட்ட காலம்தான். இது 1999 ல் வெளிவந்த நாவலுக்கு 13 ஆண்டுகளுக்கு முன்னால் வந்தது என்பதால் தான் உங்களை கேட்கிறேன்.
எக்ஸ் : ஒரு விஷயம் புரிஞ்சுக்கோ. எந்த ஒரு பிரபலமான படைப்புக்கும் ஏதோ ஒரு படைப்பு, அதன் முன்னாலோ அதன் பின்னாலோ வருவதன் மைய இழை பொருந்திப்போகலாம். அதனால் அதனை காப்பி என்று புறந்தள்ளிடமுடியுமா என்ன ? பின் தொடரும் நிழலின் குரலில் வரும் காத்திரமான சிங்க வீச்சுக்கு முன்னால் ரொம்ப மேலோட்டமாக எழுதப்பட்ட முடவன் வளத்த வெள்ளை புறா ஒரு முடமான புறா.
செந்தழல் ரவி : அப்படீன்னா யானைக்கு குதிரை மட்டம்னு சொல்றீங்களா ?
எக்ஸ் : நீ தப்பா புரிஞ்சுக்கற. மாமல்லன் மட்டமான எழுத்தாளர் அப்படீன்னோ அவரோட படைப்பு சரியில்லைன்னோ நான் சொல்லலை. அதாவது பின் தொடரும் நிழலின் குரலுடன் ஒப்பிடவே முடியாத படைப்பு அதுன்னு சொல்லவரேன். அது வேற படைப்பு. வேறொரு ஆளுமையிடம் இருந்து. இது வேறு ஒரு படைப்பு. முற்றிலும் வேறான ஒரு ஆளுமையிடமிருந்து. வார்த்தைகள் வேறு. வாசகருக்கு காட்டும் சித்திரம் வேறு. கேன்வாஸ் வெள்ளை மல் துணி, ஆனா வேறு வேறு ஓவியர்கள் வரைஞ்ச குழப்பமான வண்ணக்கலவைகளுடன் கூடிய நதியோட ஓவியம்னு வெச்சுக்கோயேன்.
செந்தழல் ரவி : அப்ப மாமல்லன் ஏன் இதை இப்ப வந்து சொல்லனும் ? இம்புட்டு நாளா சொல்லியிருக்கலாமே ?
எக்ஸ் : அவர் ஏன் இப்ப இதை சொல்றார் அப்படீன்னு மாமல்லனையே கேளு.
செந்தழல் ரவி : உங்களுக்கு தான் ஜெமோ பழக்கமாச்சே அவர்ட்ட கேட்டு அவர் தரப்பை சொல்லுங்களேன்.
எக்ஸ் : இது வெறும் பப்ளிஸிட்டிக்காக செய்யறது அப்படீங்கறார் ஜெ. பிரபலமான ஒரு படைப்பை பற்றி இப்படியான குற்றச்சாட்டுகள் எழும்போது, இது பற்றி அந்த படைப்புகளை வாசிச்ச வாசகர்கள் தான் முடிவு செய்யனும்னு சொல்லிட்டார்.
செந்தழல் ரவி : அவரோட சைட்ல விளக்கம் எழுதுவாரா ? கொஞ்சம் கேட்டு சொல்லுங்களேன்.
எக்ஸ் : இதை நீ கேப்பேன்னு தெரியும். உங்கிட்ட பேசிக்கிட்டிருக்கும்போது அவரை சேட்ல புடிச்சு ஏற்கனவே கேட்டுட்டேன். இது மாதிரியான சீப் பப்ளிஸிட்டிக்கெல்லாம் டைம் வேஸ்ட் பண்ணமாட்டேன்னுட்டார். இது தான் அவரோட பதில்.
செந்தழல் ரவி : ஓக்கே ஓக்கே. அவருக்கு ஒரு தேங்ஸ் சொல்லிடுங்க. உங்க சாட்டிங்கை வெச்சே ஒரு பதிவை தேத்திட்டேன்.
எக்ஸ் : அடப்பாவி...
செந்தழல் ரவி : சரி உங்களை யார்னு பதிவுல போட்டுடவா ?
எக்ஸ் : போட்டுக்கோ. வழக்கமா மனசாட்சிக்கு போடுற வெள்ளை பைஜாமா குர்த்தா இல்லாம ஒரு ஜீன்ஸ் டிஷர்ட் போட்டுவிட்டுடு.
.....