
பீச்சில் மீன் பிடிப்பது அடியேனின் முக்கியமான பொழுதுபோக்கு..தமிழக மீனவர்கள் கூட இந்த கலையை கற்றுக்கொண்டால், இலங்கை ராணுவத்தின் துப்பாக்கிச்சூட்டில் இருந்து தப்பிக்கலாம். இலங்கை ராணுவத்தினர் முன் இந்திய ராணுவத்தினர் கூட கையை தூக்கி சரணடைவதாக ஒரு தகவல் பரவிக்கிடக்கிறது..யானை படுத்தால் குதிரை கூட குத்தாட்டம் போடுமாம். சரி அதை விடுங்கள்.
கடல் உளுவை மற்றும் அற்புதமான கெளுத்தி மீன்கள், கொஞ்சம் நடுத்தர வகை மீன்கள் கிடைக்கும்..புளிச்சகாய் அல்லது நல்ல பழம் புளியை போட்டு மீன் குழம்பு வைத்தால் ச்ச்சும்மா தூக்கும்...
மீன் பிடி தூண்டில் என்பது பொதுவாக ஒரு நீளமான கம்பி அல்லது குச்சில் ஒரு நல்ல மெல்லிய ஆனால் எளிதில் அறுக்கமுடியாத நைலான் இழை, அதன் முனையில் ஒரு தூண்டில் முள், மீன் மாட்டிவிட்டதை பார்க்க தண்ணீரில் மிதக்கும் ஒரு தக்கையை தூண்டில் முள் இணைக்கப்பட்டுள்ள முனைக்கும் கயிறு கம்பியில் கட்டப்பட்டுள்ள முனைக்கும் நடுவில் கட்டவேண்டும்...
பொதுவாக ஆற்று நீர், கிணற்று நீர், ஏரி நீர் என்று சொல்லப்படும் நன்னீர்ல் தூண்டில் போடும்போது, மீன் மாட்டினால் தக்கை முழ்கும், அதை பார்த்து தூண்டிலை மேலே இழுத்தால் போதும்.தக்கையின் மெல்லிய அசைவு கூட ஏரியிலோ கிணற்றிலோ தூண்டில் போட்டு மீன் பிடிக்கும்போது தெரியும். ஆனால் பீச்சில் இந்த முறையில் மீன் பிடிக்க முடியாது.
பீச்சில் மீன் பிடிக்கவும் தேவை ஒரு தூண்டில்..இதற்கு தூண்டில் குச்சு, தக்கை எல்லாம் இருக்கவேண்டும் என்று அவசியமில்லை..நீளமான மெல்லிய ஆனால் உறுதியான நைலான் வயரில் இணைக்கப்பட்ட ஒரு துண்டில் முள்..தூண்டில் முள்ளுக்கு ஒரு மீட்டர் நீளம் விட்டு ஏதாவது நெட் அல்லது சிறிய இரும்பு துண்டை கட்டவேண்டும்.
நல்ல நீளமான கயிறு இருப்பதால் நன்கு தூக்கி வீசும்போது, இரும்பு துண்டு தரையில் விழுந்து, தூண்டில் முள் அலையின் காரணமாக மேலே எழும்பும்.

அடுத்தது மீனுக்கான உணவு...பொதுவாக நிலப்பகுதிகளில் , கிணற்றில் , ஆற்றில் மீன் பிடிக்க மண் புழுவை தோண்டி எடுத்து பயன்படுத்துவோம்..அதனை தூண்டில் முள்ளில் சொருகி அதனை தண்ணீரில் போடுவோம்..கொஞ்சம் கொச கொசவென்று இருக்கும் மண் புழுவை பாதியாக கிள்ளி, அதன் உடல் பாகத்தினுள் தூண்டில் முள்ளை, முள் வெளியே தெரியாவண்ணம் சொருகி பயன்படுத்துவோம்.இது ஒரு தனி கலை.
கடல் சார்ந்த பகுதிகளில் மண் புழுவை கண்டுபிடிப்பது கடினம்...அதனால் மட்டிக்கல்..அல்லது மட்டி...அல்லது சிப்பி என்று அழைக்கப்படும் ஒன்றை உடைத்து அதன் உள்ளே இருக்கும் உயிரினத்தை தூண்டில் முள்ளில் மாட்டுவோம்..
இன்னோரு தகவலையும் சொல்லவேண்டும், வெளிநாடுகளில் உபயோகப்படுத்தும் தூண்டில் முள், ஒருவகையான சிறிய ப்ளாஸ்டிக் மீன்களை இணைத்திருப்பார்கள். அதாவது பல வண்ணங்களில் கிடைக்கும் இந்த ப்ளாஸ்டிக் மீன்களை இரையாக பயன்படுத்தலாம். மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம், மட்டிக்கல்லையோ, மண்புழுவையோ தேடவேண்டிய அவசியமிருக்காது.

இந்த படத்தில் மட்டி ஒன்றை காட்டியுள்ளேன்...பொதுவாக பீச்சில் இது போன்று நிறைய நீங்கள் பார்த்திருக்கலாம்..இதனை எடுத்து ஒரு கல்லில் வைத்து உடைத்தால் - அதாவது ப்ரெஷ்ஷாக இருப்பதை எடுத்து உடைக்கவேண்டும்..
ஏற்கனவே பாஸில் ஆனதை எடுத்தால் உள்ளே ஏதும் இராது..நத்தை போன்றது தான் இது, கொஞ்சம் அலை அடித்துக்கொண்டிருக்கும் இடத்தில் சென்று தமிழ்நாட்டு ஹீரோயின் மாதிரி காலால் கோலம்போட்டால் தட்டுப்படும்..
இதனை உடைத்தால் உள்ளே ஒரு சிறிய சதைப்பகுதி போன்ற ஒன்று கிடைக்கும்...அதனை அப்படியே தூண்டில் முள்ளில் மாட்டவேண்டும்..ப்ளாஸ்டிக் இரையை விட இந்த மட்டிக்கல் இன்னும் அழகாகவும், வாசனையாகவும் இருப்பதால் எளிதில் மீன் சிக்கும்.
முன்பே சொல்லியபடி தூண்டில் கயிறு மிக நீளமாக இருக்கவேண்டியது அவசியம், அதன் முனையில் ஒரு சிறிய வெயிட், இரும்பு குண்டு அல்லது சிறிய நெட், கட்டினால் சுழற்றி தூக்கி வீசுவதற்கு எளிதாக இருக்கும்.
இரையை மாட்டி, அக்கம் பக்கம் பார்த்து, தூண்டிலின் நுனியை கையில் இரண்டு சுற்று சுற்றி, தலைக்கு மேலே வெயிட்டை விர் விர் விர் என்று சுற்றி கடலை நோக்கி வீசவேண்டும்...
வீசும்போது எவ்வளவு தூரம் கடலுக்குள் போகமுடியுமோ அவ்வளவு தூரம் செல்வது நல்லது...அலை உள்வாங்கியிருக்கும் நேரத்தில் முட்டிக்கால் அளவு தண்ணீரில் நின்று வீசினால் நமது தூண்டிலின் நீளத்தை பொறுத்து அரை கிலோ மீன்கள் நடமாடும் இடம் வரை வீசமுடியும்..
இனி முக்கிய கட்டம்...
இரையை மாட்டியாச்சு, தூண்டிலை வீசியாச்சு...அப்படியே தேமே என்று நின்றிருந்தால் மீன் மாட்டாது.மேலும் மிகவும் சென்சிட்டிவ் ஆக கைகளை வைத்துக்கொள்ளவேண்டும், அலை வந்துகொண்டேயிருப்பதால் சரியாக கணிக்கவில்லை என்றால் மீன் மாட்டியதும் தெரியாது, மீன் இரையை தின்றுவிட்டு போவதும் தெரியாது...
மெல்ல இடது வலது இழுத்து, வீசிய இரும்பு குண்டின் எடை கூடியிருக்கிறதா, மீன் சிக்கியுள்ளதா என்று பார்த்துக்கொண்டேயிருக்கவேண்டும்.
மீன் மாட்டியிருப்பது போல தெரிந்தால் படுவேகமாக இழுக்கக்கூடாது...ஏன் என்றால் வேகமாக இழுத்தால் அழுத்தமான் முட்களை உடலுக்கு வெளியே கொண்டுள்ள கெளுத்தி போன்ற மீன்கள், தரையில் சிக்கி அறுந்துபோகும். அல்லது கொஞ்சம் எடை அதிகமான மீன்கள் நைலான் கயிறை அறுத்துவிட்டு சென்றுவிடுவதும் உண்டு.
மென்மையாக அதே சமயம் உறுதியாக இழுக்கவேண்டும், அந்த கலையை முழுமையாக கற்க எனக்கு ஒரு ஆண்டு பிடித்தது...இந்த கலை தெரியவில்லை என்றால் பெரிய மீன்கள் மாட்டினாலும் அவை நீரோடு போய்விடும்...

இதுவரை சொன்னதை வைத்து நீங்கள் முயன்றால் அல்லது உங்கள் தூண்டில் முள் நல்ல உறுதியானதாக பெரியதாக இருந்தால் நல்ல பெரிய மீன்கள் கிடைப்பதற்கு அருமையான வாய்ப்பு,நீங்கள் இன்னும் கொஞ்சம் பழகிவிட்டால் மேலும் சிறப்பாக செய்யலாம்..
சரி அடுத்தது என்ன ? நல்லதாக நாலு மீனை தேற்றியபிறகு ? புளிச்சகாயை போட்டு குழம்பு வைக்கவேண்டியது தானே ?
அது என்ன புளிச்சகாய் மீன் குழம்பு என்று கேட்கிறீங்களா ?

எங்களை மாதிரி கடல்சார் ஆசாமிகள் புளியை போட்டு மீன் குழம்பு வைத்தால் ரசிக்கமாட்டோம்...எங்கள் தமிழக தேவனாம்பட்டினம் ஏரியாவில் - அட ஆழிப்பேரலை வந்து மொத்தமாக கொண்டுபோனதே மக்களை அந்த ஏரியாதானுங்க, புளிச்சகாய் என்று ஒன்று உண்டு...
கட்டிங் ஆசாமிகள், கஞ்சா குடிக்கிகள் என்று அனைவரும் ரசிப்பது இந்த புளிச்சகாய் மற்றும் அதில் செய்யப்பட்ட மீன்குழம்பு...என்னைப்போல நல்லவர்களும் ரசித்து சாப்பிடும் இந்த புளிச்சகாய் எப்படி இருக்கும் ? பச்சையாக கொஞ்சம் கோவக்காய் போல இருக்கும்...
குழம்பில் நாலு உருண்டை புளி தரும் புளிப்பை அந்த காய் ரெண்டு போட்டால் தரும்..ஒரு தனிப்பட்ட சுவையை மீன் குழம்புக்கு தருவது புளிச்சக்காய்.இதை தனி ஒரு கட்டுரையாகவே எழுதும் அளவுக்கு ரசனையான விஷயம், இருந்தாலும் இந்த பதிவில் இவ்வளவு புளிச்சகாய் புராணம் போதும்.
கொசுறு டிப்ஸ் : மீன்களிலேயே சுவையுடைய மீன் எது ? தேங்காய் பாறை என்று ஒரு மீன் உண்டு...நான் சாப்பிட்ட மீன்களிலேயே சுவையுடையது இந்த தேங்காய்பாறை மீன் மட்டும்தான்...மீன் பிடிக்கும்போது இது அகப்பட்டால் விற்பனைக்கான மீன்களில் இருந்து மீனவர்கள் தனியாக எடுத்துவைத்துவிடும் அளவுக்கு இதன் சுவை இருக்கும். தமிழகம் பக்கம் வந்தால் மீன் கடைகளில் விசாரித்துப்பாருங்கள்.