
பாண்டிச்சேரியில் ஹார்ட்வேர் எஞ்சினீயராக வேலைபார்த்த காலம் தொண்ணூறுகளின் இறுதியில். பக்கத்துவீட்டுக்காரன் கம்பூட்டர் வாங்கிட்டானே என்று தானும் வாங்க ஆரம்பித்த மக்களால் எங்களுக்கும் ஓயாத வேலை. சிடியை கம்ப்யூட்டரி எப்படி போடுவதில் இருந்து, கம்பியூட்டரில் ஸ்டார்ட் பட்டன் தெரியமாட்டேங்குது வரை இரவு பதினோரு மணி வரை பம்பரமாக சுற்றவேண்டிய வேலை.
சம்பளம் என்னவோ பெரிதாக இல்லை என்றாலும், நெல்லித்தோப்பு ஆபீஸுடன் இணைந்த ஓனர் வீட்டு நான் வெஜ் சாப்பாடும், பீச் காற்று முகத்தில் அறையுமாறு அரியாங்குப்பத்தில் இருந்த கம்பெனி ஓனரின் உபயோகப்படுத்தாத பீச் கெஸ்ட் ஹவுசும், அவ்வப்போது ரத்னா தியேட்டர் எதிர் சந்தில் கிடைக்கும் பீரும் இட்லியும் புரோட்டாவுமாக காலம் ஓடிய ஓட்டம் புல்லட் ரயில்வேகம்..
காலையில் எட்டுமணிக்கு ஆரம்பிக்கும் பரபரப்பான பணிச்சுமையில் இரவு வந்து படுக்கையில் விழுவது எப்போது மீண்டும் எழும்புவது எப்போது என்றே தெரியாத வகையில் இருந்ததொரு காலம். ஆங்காங்கே சிகரெட் பட்ஸும், மூலைகளில் நிறுத்திவைக்கப்பட்ட கடைசி ரெண்டு ஸிப் குடிக்கப்படாத பீர் பாட்டில்களும், வாசலில் நிற்கும் அரச மரத்தில் இருந்து எப்போதாவது உள்ளேயே பறந்து வந்து விழும் காய்ந்த சருகுகளுமாக, அந்த அழகிய கெஸ்ட் ஹவுஸ் ஒரு குட்டி குப்பைத்தொட்டியாக்கியிருந்தது.
சோம்பலானதொரு ஞாயிற்றுக்கிழமை காலை. லட்சங்களை கொட்டி வாங்கிப்போட்ட கெஸ்ட் ஹவுஸ் எப்படி இருக்கிறது என்று பார்த்துவிட்டு போகலாம் என்று காரை செல்ப் ட்ரைவ் செய்துகொண்டு வந்து என்னுடைய ஓனரே வீட்டு கதவை தட்டுகிறார். கைலி அவிழ்ந்துவிடாமல் கொஞ்சம் இறுக்கமாக கட்டிக்கொண்டு கையில் கிடைத்த ஏதோவொரு டிஷர்ட்டை எடுத்து போட்டுக்கொண்டு, கதவை திறக்கிறேன்..
உள்ளே நுழைந்தவருக்கு வீடு இருந்த கோலத்தை பார்த்து அதிர்ச்சி...ஒன்றும் பேசவில்லை..சுவரோரம் தானும் அழுக்காக நின்றிருந்த துடைப்பம் ஒன்றை எடுத்து, பரபரவென வீட்டை சுத்தம் செய்ய ஆரம்பித்தார். எனக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. பல கோடிகளுக்கு அதிபர், இப்படி நம் வீட்டை சுத்தம் செய்கிறாரே என்று கொஞ்சம் உறைந்துதான் போனேன். கிட்டத்தட்ட பதினைந்து நிமிடங்கள்.
கையை நீட்டி ஒட்டடை அடித்து, அதனையும் பெருக்கி, குப்பைகளை, பீர் பாட்டில்களை வெளியில் இருந்த குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டு வந்து துடைப்பத்தை மூலையில் வைத்துவிட்டு, சரி நான் வரேன் ரவி. நாளைக்கு ஆபீஸ்ல பார்க்கலாம். என்று சொல்லிவிட்டு காரை எடுத்துக்கொண்டு போய்விட்டார்...
நான் அதன்பின் எவ்வளவு வேலை இருந்தாலும் தினமும் வீட்டை சுத்தப்படுத்தி வைக்க ஆரம்பித்தேன்..!!!
.
.
.