இலங்கை -> LTTE -> இந்தியா -> DeadLock

இலங்கை பிரச்சினை பற்றி இந்திய தமிழர்கள் பேசுவது கூட குற்றமாகும் என்ற பிம்பத்தை சீமானும் திருமாவும் உடைத்தெறிந்த பிறகு இந்திய தேசியம் - சிங்கள இனவெறி - தமிழ் ஈழம் பற்றியதான என்னுடைய எண்ணங்களை பதிவு செய்யவே இந்த கட்டுரை...
இன்றைக்கு சந்தித்த ஈழ தமிழ் நன்பர் ஒருவரின் பார்வையும் அவர் கூறிய கருத்துக்களும் இந்த கட்டுரையை எழுத மேலும் ஊக்கம் தந்தது...
அவருடைய எண்ணங்களில், விடுதலைப்புலிகள் இலங்கையில் அரசியல் தீர்வை எட்ட அவர்களுக்கு கிடைத்த பல வாய்ப்புகளை நழுவவிட்டுவிட்டார்கள் என்பதேயாகும்...
புலிகளுக்கு கிடைத்த வாய்ப்புகள் என்ன ?
புலிகளுக்கும் அதன் தலைவர் வே பிரபாகரன் அவர்களுக்கும் இந்தியா முன்வைத்த தீர்வுத்திட்டம், மாநில சுயாட்சி போன்றதொரு அரசு.

இன்றைக்கு காஷ்மீர் மாநிலத்துக்கு கொடுக்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்தை மேற்கோள் காட்டி முன்வைக்கப்பட்ட இந்த திட்டம் பிரபாகரன் அவர்களால் முழுமையாக நிராகரிக்கப்பட்டது...
அந்த கூட்டத்தில் ராஜீவ் காந்திக்கு எதிரே அமர்ந்திருந்த தேசத்தின் குரல் என்று அழைக்கப்பட்ட திரு.ஆண்டன் பாலசிங்கம் காலமாகிவிட்டார்...
ஆனால் எம்.ஜி.ஆரின் பிரதிநிதியாக அதில் கலந்துகொண்ட திரு.பண்ரூட்டி ராமச்சந்திரன் இன்னும் இருக்கிறார்...அவரிடம் கேட்டால் அவர் சொல்லக்கூடும்...அங்கே என்ன பேசினார்கள் என்று ? பத்திரிகையாளர்கள் யாராவது அவரிடம் கேட்டு வெளியிடுங்களேன்..

கிட்டத்தட்ட ஜெயவர்த்தனேயை ஒரு மிரட்டு மிரட்டித்தான் ராஜீவ் அவர்கள் இந்த உடன்படிக்கைக்கு உடன்பட வைத்தார்...சிங்களருக்கோ - தமிழர்களுக்கு தனி நாடு அல்ல, தனி கூடு கூட உருவாவதை ஏற்றுக்கொள்ளாத மனோ நிலைதான் அன்றைக்கு இருந்தது...

அதனால் தான், அப்படிப்பட்ட ஒரு தீர்வுத்திட்டத்தை முன்வைத்த திரு.இராஜீவ் காந்தியை துப்பாக்கி கட்டையை திருப்பி அடித்த ராணுவ வீரன் ஹீரோ அளவுக்கு சிங்கள இனவாதிகளால் பார்க்கப்பட்டான்..

இந்திய தேசியத்தின் திட்டம் என்ன ?
இந்திய தேசியம் ஏன் அவ்வாறான திட்டத்தை முன்மொழிந்தது ? அந்த திட்டத்தை எப்படி சிங்களர்கள் ஏற்றுக்கொண்டார்கள் ? கொஞ்சம் பார்ப்போம்...
மொழியால் இனத்தால் வேறுபட்டவர்களை இந்திய தேசியம் மற்றும் ஒருமைப்பாடு என்று கட்டி வைத்து ஆட்சி செய்வது போல நீங்களும் தமிழர்களை இறுதிவரை ஆளலாம் என்று ஜெயவர்த்தனே கன்வின்ஸ் செய்யப்பட்டிருக்கவேண்டும்...
தமிழ் ஈழம் என்ற சொல்லாடலை ஏன் இந்தியா ரசிக்கவில்லை ? தமிழருக்கு தனி நாடு உருவாகிவிடுவதை ஏன் இந்தியா அனுமதிக்கவில்லை என்ற கேள்விக்கு பதில் மிக எளிது.
ருஷ்யா என்ற நாடு (அல்லது ரஷ்யா, நான் எழுத்துக்கூட்டி படிக்க ஆரம்பித்த, 1985 ஆம் ஆண்டு வாக்கில் என்னுடைய தந்தையாரின் முயற்சியால் நான் ஒவ்வொரு மாதமும் வாசித்த யுனெஸ்கோ கூரியர் என்ற புத்தகத்தில் இப்படித்தான் எழுதுவார்கள்) உடைந்து சிதறிப்போனதை பார்த்தபிறகும் இந்தியா அப்படி ஒரு ஆபத்தான முயற்சியை ஆதரிக்குமா ?

பழைய உடையாத யூ எஸ் எஸ் ஆர்

இப்போதுள்ள ரஷ்யா
ஆக இந்தியா தனி ஈழக்கோரிக்கையை ஒரு காலத்திலும் ஆதரிக்கப்போவதில்லை...
கணிப்பொறி மொழியில் இதை DeadLock என்போம்...கோழியில் இருந்து முட்டை வந்ததா முட்டையில் இருந்து கோழி வந்ததா என்பது போன்ற விடை தெரியாத கேள்வி.
ராஜீவ் காந்தி ஏன் கொல்லப்பட்டார் ?
ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட சம்பவத்தினை பார்த்தால், IPKF தமிழ் பெண்களை கற்பழித்தது போன்ற பல விடயங்கள் சொல்லப்பட்டாலும், தமிழர்களுக்கான தனி நாடு கொள்கையை எதிர்த்தவர்கள் எல்லாரும் புலிகளால் அழித்தொழிக்கப்பட்டார்கள்...
அதில் ராஜீவும் ஒருவர் என்பதே நிஜம். அமிர்தலிங்கத்தில் இருந்து பத்மநாபா வரை, சிங்களத்தின் குறைந்தபட்ச அரசியல் தீர்வை ஏற்றுக்கொள்ளலாம் என்று நினைத்தவர்களை புலிகள் வேரறுத்தார்கள்...
தமிழகத்தில் நடந்தது என்ன ?
தனித்தமிழ்நாடு என்ற கோரிக்கையை அறுபதுகளில் எழுப்பிய அண்ணா, தேர்தல் அரசியலுக்காகவும், மைய அரசில் இருந்து வந்த குடைச்சலாலும், அந்த கொள்கையை தூர எறிந்துவிட்டு ஆட்சியை பிடிக்கவில்லையா ?
அண்ணா கொள்கையை காம்ப்ரமைஸ் செய்துகொள்ளவில்லையா ?
அது போல பிரபாகரன் இராஜீவ் வழங்கிய தீர்வுத்திட்டத்தை ஏற்றுக்கொண்டிருக்கவேண்டும்..
ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட சம்பவம் நடந்த பிறகு இந்தியாவின் நிலையை உற்று கவனிக்க தவறிவிட்டார்கள் என்றுதான் சொல்லவேண்டும்..
குறைந்த பட்சம் இரண்டாயிரத்தின் ஆரம்பத்தில் நார்வே அரசு மத்தியஸ்தத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முன் வைக்கப்பட்ட திட்டத்தை புலிகள் ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும்...
கிடைத்தவரை லாபம் என்று தமிழீழத்தின் முதல்வராக அமர்ந்திருந்தால் எவ்வளவு அருமையாக இருந்திருக்கும் ?
அண்ணா காம்ப்ரமைஸ் செய்துகொண்டதைப்போல பிரபாகரனும் காம்ப்ரமைஸ் செய்துகொண்டிக்கவேண்டும்.
அதன்பிறகு தேர்தல் அரசியல் மூலம் சிங்கள மத்திய அரசை ஆட்டிவைத்திருக்கலாம். இன்றைக்கு இந்திய மத்திய அரசில் எத்தனை தமிழர்கள் ? தகவல் தொடர்பு, சுகாதாரம், சாலைப்போக்குவரத்து, நிதி என்று எங்கே எல்லாம் அமர்ந்துவிட்டார்கள் ?
அப்படி இருந்திருந்தால் இன்றைக்கு மக்கள் மீது குண்டுகளை பொழிந்து ஆற்றொணா துயரத்துக்கு ஆளாகும் அவல நிலையை தவிர்த்திருக்கலாம்...
சர்வதேச ஈழத்தமிழ் சமூகம் என்ன செய்கிறது ?
தினமும் தாயகத்தில் இருந்து வரும் செய்திகளை கவலையோடு பார்த்துக்கொண்டிருந்த சர்வதேசம் எல்லாம் பரந்து வாழும் ஈழ தமிழ் சமூகம், இப்போது பொருள் ஈட்டுவது, வீடு வாங்குவது, மகிழ்வுந்தில் வலம் வருவது போன்ற சுயநல போக்குகளிலும், கேளிக்கைகளிலும் நாட்டத்தை செலுத்துகிறது...
பொறுப்பாளர்கள் சொல்லும் ஒன்றுகூடல்களில் திரளக்கூட நேரமில்லை...அய்யோ...அலுவலகத்தில் அதிக வேலை...என்று சலித்துக்கொள்கிறது ஈழ தமிழ் சமூகம்...அங்கே சேட்டிங் தான் செய்யப்போகிறார்கள் என்பது வேறு விடயம்...
பத்தாண்டுகளுக்கு முன்னால் தாய்க்கு அனுப்பவேண்டிய பணத்தை புலிகளுக்கு அனுப்பியவர்கள் இன்றைக்கு டிஸ்கொத்தேவுக்கு செலவழிக்கவும், செண்டு பாட்டில் வாங்கவும், உயர்தர சோபா செட் வாங்கவும் செலவழிக்கிறார்கள்...
இதற்கு இரண்டு காரணமிருக்கலாம்...ஒன்று முல்லைத்தீவில் அவர்களது உறவினர் யாரும் இல்லாமலிருக்கலாம்...அல்லது வலித்து வலித்து மரத்துப்போயிருக்கலாம்...வலி என்பதே மறந்துபோயிருக்கலாம்...
இப்போது என்ன தீர்வு ?
இன்றைக்கு உள்ள சூழ்நிலையில் சிங்கள இனவெறியர்களை பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்துவருவது மிக கடினம்.

படிப்படியாக ஈட்டும் வெற்றிகள் - நூற்றுக்கு பத்து பேர் உயிரிழந்தால் கூட, சிங்கள இனவெறி ராணுவத்துக்கு பயத்தை விதைக்கவில்லை...
மாறாக சர்வதேசங்களும் வழங்கும் ஆயுதங்களுடன் இன்னும் கொலைவெறியோடு மூளைச்சலவை செய்யப்பட்ட பிசாசுகளாக, ஆயுதங்களோடு நிற்கும் விடுதலை புலிகளிடம் மட்டுமல்ல மக்கள், ஆடுகள், மாடுகள், பள்ளிகள், ஆலயங்கள் அனைத்திலும் தாக்குதல் நடத்துகிறார்கள்...
மாசேதுங்கின் ராணுவத்திடமும், வியட்நாமிய மக்களிடமும் சர்வதேசங்கள் நல்ல பாடங்களை பெற்றுவிட்டன...
அதனால் முதலில் குண்டுகளை வீசி அனைவரையும் அழித்துவிட்டு, அல்லது உள ரீதியான அவர்களின் மனோபலத்தை சிதைத்துவிட்டே, உள்ளே வருகிறார்கள்...
இப்போதைக்கு புலிகள் செய்யவேண்டியது ஒன்றே ஒன்றுதான்...
மொத்த பலத்தையும் திரட்டி மாபெரும் தாக்குதல் ஒன்றை நடத்தி ஆயிரக்கணக்கானவர்களை வீழ்த்தவேண்டும், அல்லது வீழவேண்டும்...
இதில் எது நடந்தாலும் மீண்டும் பேச்சுவார்த்தை மேசை தூசி தட்டப்படும்...
பேச்சுவார்த்தை மீண்டும் ஆரம்பித்தால் என்ன செய்யவேண்டும் ?
அதில் புலிகள் இருந்தால் இந்த முறை அரசியல் தீர்வுத்திட்டத்தை ஏற்றுக்கொண்டுவிடுங்கள்...பிடிவாதத்தை கைவிட்டுவிடுங்கள் பிரபாகரன் அவர்களே...
அதன்பிறகு மாநிலத்தை எப்படி முன்னேற்றுவது என்பதை சர்வதேசமெங்கும் வாழும் தமிழ் சமூகம் பார்த்துக்கொள்ளும்...
அந்த பேச்சுவார்த்தை மேசையில் ஆனந்த சங்கரியும் டக்ளஸ் தேவானந்தாவும், போனாப்போகுது என்று மனோ கனேசனும் இருந்தால், அப்போதும் ஒரு அரசியல் தீர்வு திணிக்கப்படும்...
அதை பெற்றுக்கொள்ளுங்கள் தோழர்களே...அதன் பிறகு இலங்கைதீவை சொர்க்கபுரியாக உலகமெங்கும் வாழும் தமிழர்கள் மாற்றுவார்கள்...
******
*****
****
***
**
*
Comments
நான் உண்மையிலேயே பாவம் என்பதை இங்கே பதிவுசெய்துகொள்கிறேன்.....
பதிவின் மேட்டர்களில் உள்ள பிழைகளை சுட்டிக்காடினால் மகிழ்வேன்..
மேலும் இது அனைத்தும் என்னுடைய சொந்த கருத்து ஆகும்
வயித்தெரிச்சல்
இப்படியொரு கட்டுரையை நீங்க அய்ரோப்பா போனதிலிருந்து எதிர்பார்தேன். நல்லது.
வினவின் இந்த கட்டுரை உங்களுக்கு இந்திய perspectiveஐ கொடுக்க்கூடும்
ஈழம் - இந்தியா முதுகில் குத்துவது ஏன்?
http://vinavu.wordpress.com/2008/10/23/eelam1/
இன்னமும் புலிகள் யுத்தத்தில் வென்றுவிடுவார்கள் என பேசுவது சுய ஏமாற்றம், ராஜ தந்திரத்திலும் போர் தந்திரத்திலும் இலங்கை புலிகளை விஞ்சி விட்டது.
அதே சமையம் மீண்டும் பேச்சு வார்த்தை வந்தாலும் புலிகள் கை கீழே தான் இருக்கம்.
எனவே இது ஒரு வழி பாதை...
என்ன புலிகளும் இல்லையென்றால் ஈழத்தமிழனின் கதியை நினைத்தால் தான் தொண்டையில் துக்கம் அடைக்கிறது.....
வழிமொழிகிறேன்
அய்ரோப்பிய நேரத்தில் ஆக்டிவ் பதிவர்கள்
குடுகுடுப்பை
நசரேயன்
பழமைபேசி
அரைடிக்கெட்டு
நல்ல ஆலோசனை ஐயா தங்களது. இது நல்லதொரு மசாலா சினிமாவை உருவாக்கும் வல்லமையிருக்கு. தங்கள் பணியைத் தொடருங்கள்.
சொந்தக்கருத்துக்களை யாரும் எப்படியும் வெளியிடலாம்.
இத்தகைய பொழுது போக்கி(கு)களுக்கும் ஈழத்தமிழரின் போராட்டமும் சமகாலமும் நல்ல அவல்.
சாந்தி
இவர்கள் ராஜீவுக்கு அழமாட்டார்கள்
http://vinavu.wordpress.com/2008/10/28/eelam4/
தேர்தல் என்றவுடன் பொம்மை முதல்வர் வரதராஜா பெருமாள் தான் நினைவுக்கு வருகிறார்
அன்புடன்
அரவிந்தன்
பெங்களூர்
நல்ல பார்வை இது
இந்த பதிவு உங்கள் மனதை புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்...
மறந்துவிட்டேன் என்பதை விட தெரியாது என்று சொல்வதே நேர்மையானதாகும்
:)
91-வருடம் ஆரம்பத்தில் புலிகள் சார்பாக காசி.ஆனந்தனும்,மறவன்புலவு சச்சிதானந்தம் அவர்களும் இராசிவ் காந்தியை சந்திக்க ஹிந்து பத்திரிக்கை மாலினி பார்த்தசாரதி ஏற்பாடு செய்தார்.
அச்சந்திப்பில் இராசீவ் அவர்கள் ஈழ விவகாரத்தில் தான் misguide செய்யப்பட்டதாகவும்,தேர்தல் முடிந்தப்பின்னர் தான் வெற்றிபெரும் பட்சத்தில் நிச்சயம் புலிகளுக்கு உதவி செய்வதாக கூறினாராம்.
பிராகரனை நம்பிக்கையுடன் இருக்கச்சொன்னதாகவும் தகவல்.
இடையில் சிவராசன் குழுவினரை வேறு ஒரு குழ வளைத்துபோட்டு இராசீவ் அவர்களை போட்டுத்தள்ளியாதகவும் சொல்லப்படுகிறது
நீங்கள் சந்திராசாமி ஆசிர்வாதம் செய்து கொடுத்தனுப்பிய வெடிகுண்டு பெல்ட் பற்றி எதுவும் சொல்லவில்லை என்று நம்புகிறேன்...
But, before rajiv was killed there was a news about rajiv called up ltte reps. and told them wait for some time, i will become the PM again and I will rectify all those bad happened to you because of me. ltte itself has released this news from their london office that time.
எத்தனை நாட்டை தமிழன் பிரித்துப்போட்டு இருக்கான் என்று கொஞ்சம் சொல்லமுடியுமா.
எதையாவது எழதவேண்டும் என்று விவரமில்லாமல் எழுதுவதா
அன்புடன்
அரவிந்தன்
பெங்களூர்
இன்றைக்கு காஷ்மீர் மாநிலத்துக்கு கொடுக்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்தை மேற்கோள் காட்டி முன்வைக்கப்பட்ட இந்த திட்டம் பிரபாகரன் அவர்களால் முழுமையாக நிராகரிக்கப்பட்டது...
அந்த கூட்டத்தில் ராஜீவ் காந்திக்கு எதிரே அமர்ந்திருந்த தேசத்தின் குரல் என்று அழைக்கப்பட்ட திரு.ஆண்டன் பாலசிங்கம் காலமாகிவிட்டார்...//
அங்கு என்ன நடந்தது என்பதை எழுதி வைத்து விட்டுதான் ஆன்டன் போயிருக்கிறார்.
மாநில சுயாட்சி வேறு! மகாணசபை அதிகாரம் வேறு. ரஜீவ் ஏற்பாடு செய்தது மகாணசபை அதிகாரம். -
//மாகாணசபைக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகார பரவலாக்கம் மிகவும் வரையறுக்கப் பட்டது என்றும் அது தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யவில்லை என்றும் நான் ரஜீவ் காந்திக்கு எடுத்து விளக்கினேன். வடகிழக்கு மாகாண சபையை கலைத்து விடும் அதிகாரம் ஜெயவர்த்தனாவிற்கு வழங்கப் பட்டிருக்கிறது. இவர் ஒரு சிங்கள இனவெறியர். இவர் தமிழ் மக்களுக்கு நீதி வழங்குவார் என நான் நம்பவில்லை என்று கூறினார் பிரபாகரன்.//
மேலும் படிக்க
http://blog.sajeek.com/?p=378
-------------------------------------
அது போல பிரபாகரன் இராஜீவ் வழங்கிய தீர்வுத்திட்டத்தை ஏற்றுக்கொண்டிருக்கவேண்டும்//
உண்மையில் நீங்கள் பிரபாகரன் தீர்வு திட்டத்தினை ஏற்று கொள்ளாத காரணத்தினாலேயே ஈழ இந்திய யுத்தம் ஆரம்பித்ததாக கருதுகிறீர்கள். ஆனால் நிலைமை வேறு!
பிரபாகரன் - மிக தெளிவாக சுதுமலையில் உரையாற்றுகிறார். அதாவது நமக்கு இத் தீர்வு திட்டத்தில் நம்பிக்கையில்லை. ஆனால் இந்தியா என்ற பெரும் நாட்டை எதிர்க்கும் வலுவற்றவர்களாக இருப்பதனால் வேறு வழியற்று உடன்படுகிறோம். ஆயுதங்களை கையளிக்கிறோம். இனி நம் மக்களின் பாதுகாப்பிற்கு இந்தியாவே பொறுப்பு என உரையாற்றுகிறார்.
இந்திய ஈழ யுத்தம் எந்த புள்ளியில் ஆரம்பித்தது என அறிய..
http://blog.sajeek.com/?p=444
----------------------------------
இந்தியாவே புலிகளுக்கெதிரான யுத்தத்தை ஆரம்பித்தது. யுத்தம் ஆரம்பித்த பிறகு அதனை நிறுத்த கோரி பிரபாகரன் ரஜீவுக்கு 2 கடிதங்கள் எழுதினார். யுத்தத்தை நிறுத்தி பேசுவோம் என அவர் அதில் கேட்கிறார். ஆனால் புலிகளை 2 வாரத்தில் ஒழிக்கலாம் என்ற லூசுப் பயல்களின் ஆலோசனையை ரஜீவ் வேத வாக்காக எடுத்து கொண்டார்.
பிரபாகரன் எழுதிய கடிதங்கள்
http://blog.sajeek.com/?p=351
-------------------------------------
அப்புறம்.. ப்ளீஸ்..
2002 இல் நோர்வே வழங்கிய தீர்வு திட்டம் எது?
இதுவரை இலங்கை அரசு ஒரு தீர்வு திட்டத்தை வரைந்து முடிக்கவேயில்லை. இன்னமும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் புலிகள் இடைக்கால தீர்வுதிட்டத்தை வரைந்து கைவசம் வைத்திருக்கிறார்கள். அதனை ரணில் அரசிடம் கையளித்தும் இருக்கிறார்கள். அதன் அடிப்படையில் பேச மகிந்த தயாரில்லையென அறிவித்து ஆண்டுகளாகிறது.
------------------------------------
நோர்வேயில் ஒரு இழவுத் திட்டமும் வழங்கப்படவில்லை.
சமஸ்டியை நோக்கி பேசுவோம் என முடிவெடுத்திருந்தார்கள். அவ்வளவே..
--------------------------------------
ரவி.. நிறைய மற்றயவர்களை விட உங்களுக்கு அதிகம் தெரியும் என நம்பியிருந்தேன். நம்பிக் கெடுவதே ஈழத் தமிழன் விதியென்றானது.
தம்பி சூர்யா..
அது ஆண்டாள் பாலசிங்கம் இல்லை :-)
ஆண்டன் பாலசிங்கம்.
தவிர புலிகள் ஒருபோதும் இராசீவ் அவர்களை கொன்றதாக சொல்லவில்லை.ராசீவின் மரணம் ஒரு துன்பியில் சம்பவம் என்றுதான் பிரபாகரன் சொன்னார்
I believe he never want to rule. Coz, rajiv told him that he will be made as the CM of Eelam state. He denied it on the table. He never want to rule. His loyalty and sincerity has been acknowledged by many international people who have interacted him. Even the chief of ipkf has said this in one interview.
இவர் போனபிறகுதான் ஈழபிரச்சனையில் எப்போதும் துடிப்பாக இருந்த காப்டன் (பிரபாகரன்)(விசயகாந் பிரபாகரன் அபிமானியாக தனது மகனுக்கிட்ட பெயர்) விசயகாந் மெளனமானது.
ரவி உங்கள் பார்வையில் வித்தியாசம் தெரிகிறது.நல்லது.
ஆனால்
யார் என்ன சொன்னாலும் சிங்களவன் தமிழர்க்கு உரிமை தர ஒப்புவானா? என்பதுதான் கேள்வி!
திருவிளையாடல் தருமி சொல்வது போல் அவன் தராரா..ரா...ன்
சிங்களவன் ஒன்றுக்குமே ஒப்பமாட்டான்.
இது புலி பால் குடித்து வளர முன்னமே எழுதிய தீர்ப்பு
மேலதிக விபரங்களுக்கு
வரதராசா பெருமாள்
மே/பா இந்திய அரசு
தமிழ் இனம் கண்ட மாபெரும் வீரன் அவன்.
உங்கள் பின்னூட்டம் நீக்கப்படுகிறது...
ஆண்டன் பாலசிங்கம் என்று இருக்கவேண்டும்...
உள்ளர்த்தத்தோடு எழுதி இருக்கமாட்டீர்கள், எழுதுப்பிழைதான் என்று நம்பி மன்னிக்கிறேன்...
ராஜீவ் காந்தியை கொலை செய்தது நாங்கள் என்று புலிகள் எப்போதும் ஒத்துக்கொள்ளவில்லை..
குமுதத்தில் வந்த பெங்களூர் ரங்கநாத் வாக்குமூலத்தை படித்துவிட்டு உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்க
அரவிந்தன்
உங்கள் சில நண்பர்களின் துயர் தீர பிரபாகரன் இறக்க வேண்டும். அந்தச் சில நண்பர்களால் எமது மக்கள் பட்ட துயர் சொல்ல முடியாத கோரம் மிக்கவை.
எங்கள் தமிழினம் வாழ பிரபாகரன் வாழவேண்டும்.
பிரபாகரன் என்ற போராளியின் மரணத்தில் தமிழினத்திற்கு விடிவு காலம் ஒருபோதும் வந்துவிடாது. சூரியா உங்கள் கருத்துக்களை மதிக்கிறேன். ஆனால் எங்கள் மண்ணின் நிலவரத்தை சரியாக அறிந்திருந்தால் இத்தகையதொரு கொரூரம் மிக்க வார்த்தைகளை எழுதியிருக்கமாட்டீர்கள்.
வாழ்க உங்கள் ஜனநாயகம்.
சாந்தி
சப்பாத்தி தின்னும் இந்திக்காரனும் சோறு தின்னும் நாங்களும் ஒரே நாட்டில் சேர்ந்து வாழலையா ? அவன் நிதிக்கும் அவன் தகவல் தொழில்நுட்பத்துக்கும் நாங்க அமைச்சுபணி தலைமை ஏற்கலையா ? அந்த நம்பிக்கையில் அப்படி சொன்னேன்...
தமிழர்களுக்கு ஜனநாயகத்தின் அனைத்து கதவுகளூம் மூடப்பட்டுவிட்டன.
ஓ.. இந்தி காரன் தமிழனை மதிக்கிறானா... ? எனக்கென்னவோ அரசியலில் அவன் தமிழனை கணக்கெடுக்கிறதாகவே தோணலை.. மிதிபட்டு வாழ்றதுதான் வாழ்க்கையென்றால் இலங்க தமிழன் அதை எப்போதே செய்திருப்பானே..
தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் சொல்லிக்கேட்டதை வைத்தும், உங்கள் போன்ற ஈழ ஆதரவார்களின் பதிவுகளைப் படித்தும் நானும் தனி ஈழம் தான் தீர்வு என்றெல்லாம் உறுதியாக நினத்துக் கொண்டிருந்தேன்..
ஆனால் நான் சந்தித்த ஈழத்தமிழர்களின் கருந்துக்களோ வேறு மாதிரி இருந்த்ததால் தான் பிரபாகரன் மீது வெறுப்பு வந்தது.
அவர்களெல்லாம் இலங்கையை விட்டுத் தப்பித்து வருவது சிங்களர்களைப் பார்த்து பயந்து அல்ல.. புலிகளைப் பார்த்துத்தான்..
இப்படி மிரட்டி மிரட்டி எத்தனை ஆட்களை புலிகள் சேர்த்த முடியும்? மக்களே விருப்பபட்டு போராடும் போராட்டமாகத் தெரிய வில்லையே.. அதுதான் குழப்பமாக உள்ளது.
பொண்டாட்டி புள்ளைகளை விட்டு, பெத்தவங்களை விட்டு, சிறையிலும்,
அகதிகளாக படும் பாட்டை பார்த்த வருத்தம் தான்.. என்னை இப்படி பேச வைக்கிறது.
தவறிருந்தால் மன்னியுங்கள்.. எனக்கு எல்லாம் தெரியும் என்று சொல்லவில்லை.. ‘எனக்கு தெரிந்தவரை' மட்டும்தான் நான் சொல்லிக்கொண்டிருக்கிறேன்..
ரவி.. புரிகிறது. இதே மனநிலை.. அதாவது தோற்று விட்ட பிறகு (கள முனைகளில் மட்டும்).. சே.. அப்பிடி செய்திருக்கலாமே.. இப்பிடி செய்திருக்கலாமே.. என நம்மாட்களே ஆரம்பித்து விட்டார்கள்.
அவ்வாறான ஒரு ஈழ நண்பரிடம் தாங்கள் முழுத் தீட்சை பெற்றிருக்கிறீர்கள். :)
இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்தாகிய 72 மணி நேரத்திற்குள் எமது விடுதலை இயக்கம் சகல ஆயுதங்களையும் ஒப்படைக்க வேண்டுமென விதிப்பது அநீதியானது. தமிழரின் தேசிய இனப்பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கு முன்னால் தமிழ் மக்களின் பாதுகாப்பிற்கு தகுந்த உத்தரவாதங்களை பெறுவதற்கு முன்பாக எமது மக்களின் பாதுகாப்பு கவசமாக விளங்கும் ஆயுதங்களைக் கையளிக்குமாறு வற்புறுத்துவது எவ் வகையிலும் நியாயமாகாது என மேலும் பிரபாகரன் கூறினார்.
நாம் உரையாடி முடிக்கும்வரை குறுக்கிட்டுப் பேசாது பொறுமையுடன் எமது கருத்துக்களை மிகக் கவனத்துடன் கேட்டறிந்தார் இந்தியப் பிரதமர். இந்த ஒப்பந்தத்தில் நிறையக் குறைபாடுகள் இருக்கின்றன என்பதை ஏற்றுக் கொண்ட இந்தியப் பிரதமர் வடகிழக்கின் நிரந்தர இணைப்பை கருத்து வாக்கெடுப்பிற்கு விடுவதில் உள்ள சிக்கலைப் புரிந்துள்ளதாகக் கூறினார்.
இந்த ஒப்பந்தம் தமிழ் மக்களின் நலனைப் பேணவில்லை. மாறாக பாதிக்கின்றது. ஆகவே இந்த உடன்படிக்கையை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னார் பிரபாகரன். விடுதலைப் புலிகளுடன் முரண்பட்டு தனது முயற்சியை முறித்துக் கொள்ள விரும்பாத பிரதமர் திடீரென தனது அணுகுமுறையை மாற்றிக் கொண்டார்.
உங்களது நிலைப்பாடு எனக்கு நன்றாகப் புரிகிறது. நீங்கள் எடுத்த முடிவையோ கொள்கையையோ மாற்றச் சொல்லி நான் கேட்கவில்லை. நீங்கள் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளத் தேவையில்லை. ஆனால் ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்காமலே இருந்தால் போதும். என்றார் ராஜீவ் காந்தி. அவ்வேளை தலையிட்டுப் பேசிய பண்டுருட்டி ராமச்சந்திரன் ராஜீவின் கூற்றுக்கு மெருகூட்டி ஒரு விளக்கம் கொடுத்தார். இது ஒரு அற்புதமான திருப்பம் அல்லவா? பிரதம மந்திரியே உங்களது நிலைப்பாட்டை ஏற்றுக் கொள்கிறார். நீங்கள் ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளத் தேவையில்லை. ஆனால் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டாம். இந்தச் சிறிய சலுகையையாவது இந்திய அரசுக்கு நீங்கள் செய்யக் கூடாதா என்று கேட்டார் தமிழக அமைச்சர்.
ஒரு விடயத்தை நாம் ஏற்றுக் கொள்ளவில்லையென்றால் அதை நாம் எதிர்க்கிறோம் என்பதுதானே அர்த்தம்? ஒரு விடயத்தை ஏற்றுக் கொள்ளாமலும் அதே வேளையில் எதிர்க்காமலும் இருப்பது எப்படி? இதுவொரு விந்தையான வாதம் என்று எனது காதுக்குள் குசுகுசுத்தார் பிரபாகரன். தனது கூற்றில் உள்ள புதிரை நாம் புரிந்து கொண்டோம் என்பதை உணர்ந்த பிரதமர் பிரச்சனையை வேறு பரிணாமத்திற்கு எடுத்துச் சென்றார்.
மாகாணசபைத் திட்டத்தில் குறைபாடுகள் இருக்கலாம். எனினும் நாம் தொடர்ந்து பேச்சு நடாத்தி பிரதேச சுயாட்சி அதிகாரத்தைக் கூட்டலாம். இந்த மாகாண சபைத்திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துவது சாத்தியமற்றது என்பதை நீங்கள் அறிவீர்கள். அதற்கு நீண்ட காலம் பிடிக்கலாம். ஆதலால் அந்தக் கால இடைவெளியில் வடகிழக்கில் ஒரு இடைக்கால அரசை நிறுவ முடியும். அந்த இடைக்கால அரசில் உங்களது அமைப்பு பிரதான பங்கை வகிக்கலாம். தமிழர் மாநிலத்தில் ஒரு இடைக்கால சபை அரசு நிறுவுவது பற்றி நான் உங்களுடன் ஒரு இரகசிய உடன்பாடு செய்து கொள்ளவும் ஆயத்தமாக இருக்கிறேன் என்றார் ராஜீவ் காந்தி.
பாரதப் பிரதமரின் யோசனை பண்டுருட்டி ராமச்சந்திரனை பரவசத்தில் ஆழ்த்தியது. உற்சாகம் மேலிட உணர்ச்சி வசப்பட்ட அவர் இந்த அற்புதமான சந்தர்ப்பத்தை நழுவ விட வேண்டாம். தமிழ்த் தாயகப் பிரதேசத்தில் விடுதலைப் புலிகளின் நிர்வாக ஆட்சியை நிறுவும் அருமையான வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்திய இலங்கை ஒப்பந்தம் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ள வேண்டாம். அதற்கு முன்னராக ராஜீவ் - பிரபா ஒப்பந்தம் வரப் போகிறது. இதனைப் பகிரங்கப்படுத்தத் தேவையில்லை. இரகசியமாகவே வைத்துக் கொள்ளலாம். என்று கூறினார்.
ஆழமான சிந்தனைகளில் ஆழ்ந்து போயிருந்தார் பிரபாகரன். இந்த இரகசிய ஒப்பந்தங்கள் உடன்பாடுகள் உறுதிமொழிகளில் அவருக்கு நம்பிக்கையில்லை. ஆனால் பண்டுருட்டியார் ராஜீவ் பிரபா ஒப்பந்தத்திற்கு ஒரு பிரமாதமான வடிவம் கொடுக்க முயன்று கொண்டிருந்தார்.
மாகாண சபை உருவாக்கப்படுவதற்கு முன்னர் வட கிழக்கில் ஒரு இடைக்கால நிர்வாக ஆட்சி நிறுவப்பட்டு அதில் விடுதலைப் புலிகளுக்கு பெரும்பான்மை பிரதிநிதித்துவம் வழங்குவதென முடிவெடுக்கப்பட்டது. தமிழரின் பாரம்பரிய நிலத்தில் சிங்களக் குடியேற்றம் நிறுத்தப் பட வேண்டுமென்றும் தமிழ்ப் பகுதிகளில் சிங்கள அரசு காவல்துறைக நிலையங்களைத் திறக்கக் கூடாது என்றும் பிரபாகரன் கேட்டுக் கொண்டார். அதற்கு ராஜீவ் இணக்கம் தெரிவித்தார்.
அடுத்ததாக ஆயுதக் கையளிப்புக் குறித்து பேசப்பட்டது. உங்கள் அமைப்பிடமுள்ள எல்லா ஆயுதங்களையும் கையளிக்குமாறு நாம் கேட்கவில்லை. அத்துடன் உங்களது கெரில்லா படையணிகளையும் கலைத்துவிடுமாறு நாம் சொல்லவில்லை. நல்லெண்ண சமிக்கையாக சிறுதொகை ஆயுதங்களைக் கையளித்தால் போதும். ஒப்பந்த விதிகளுக்கு அமைவாக புலிகள் செயற்படுகிறார்கள் என சிறிலங்கா அரசையும் அனைத்துலக சமூகத்தையும் நம்ப வைக்கும் வகையில் இந்த ஆயுதக் கையளிப்பு நடைபெறுவது அவசியம். தமிழமக்களுக்கும் போராளிகளுக்கும் பாதுகாப்பு அளிக்கும் வகையில் இந்திய அமைதிப்படை வட கிழக்கிலே நிறுத்தப் படும். சிங்களப் படைகள் முகாம்களுக்குள் முடங்கியிருக்கும். இந்த சூழலில் உங்களுக்கு போராயுதங்கள் தேவைப்படாது அல்லவா.? என்று கூறினார் ராஜீவ் காந்தி.
பிரபாகரன் பதில் அளிக்கவில்லை. எதற்காக கடுமையாக யோசிக்க வேண்டும். இந்தியாவிடமிருந்து பெற்றுக்கொண்ட ஆயுதங்களில் பழுதடைந்த பாவிக்க முடியாத துருப்பிடித்த ஆயுதங்கள் சிலவற்றை கையளித்தால் போச்சு என்றார் இடையில் குறுக்கிட்ட பண்டுருட்டியார்.
இந்தியாவிடமிருந்து பெற்றுக் கொண்டவை எல்லாமே பழுதடைந்த பாவிக்க முடியாத துருப்பிடித்த ஆயுதங்கள்தான் என கிண்டலாக பதில் அளித்தார் பிரபாகரன். பரவாயில்லையே.. அந்த பழுதடைந்த ஆயுதங்களில் சிலவற்றைக் கொடுத்து விடுங்கள். பின்பு தேவையேற்படும் போது இந்திய அரசிடமிருந்து புதிய ஆயுதங்களைக் கேட்டு வாங்கலாம் என்றார் அமைச்சர்.
ராஜீவ் காந்தி உற்சாகமாயிருந்தார். அன்று காலை ஒன்பது மணியளவில் அவர் புதுடெல்லியிலிருந்து கொழும்புக்கு புறப்பட ஏற்பாடாயிருந்தது. பிற்பகல் மூன்று மணிக்கு அவர் இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட வேண்டும். அவர் ஏதோ ஒரு சாதனை ஈட்டியவர் போல காணப்பட்டார். பண்டுருட்டி ராமச்சந்திரனுக்கு பரம திருப்தி. ஏதோ சிந்தனையில் மூழ்கிப் போயிருந்தார் பிரபாகரன். அவரது கண்களில் ஏமாற்றமும் சோகமும் தெரிந்தது.
ராஜீவ் பிரபா இரகசிய ஒப்பந்தம் என இங்கு பல விடயங்கள் பேசப்பட்டன. பிரதம மந்திரி அவர்களும் பல வாக்குறுதிகளைத் தந்திருக்கிறார். அவற்றை எழுத்தில் வரைந்து இரு தலைவர்களிடமிருந்தும் கைச்சாத்து பெற்றால் என்ன? அது இரகசிய உடன்பாட்டுக்கு வலுச் சேர்க்குமல்லவா என நான் பண்டுருட்டியாரிடம் கேட்டேன். அவர் சிறிது நேரம் யோசித்தார். மிகவும் சர்ச்சைக்குரிய விடயங்களில் நாம் இணக்கப் பாடு கண்டோம். இந்த விடயங்கள் அம்பலமானால் பெரியதொரு அரசியல் சூறாவளியை உண்டு பண்ணும். எமது பிரதமரில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா? இது ஒரு ஜென்டில்மேன் ஒப்பந்தம். இது உத்தமமான மனிதர்களின் எழுதப்படாத ஒப்பந்தமாக இருக்கட்டுமே என்றார் அமைச்சர். தான் கூறியதை ஆங்கிலத்தில் மொழி பெயர்ந்து ராஜீவ் காந்திக்கும் கூறினார்.
நீங்கள் எதற்கும் கவலைகொள்ளத் தேவையில்லை. கொடுத்த வாக்குறுதிகளை நான் நிச்சயமாக நிறைவேற்றி வைப்பேன். அமைச்சர் சொல்வது போன்று இது ஒரு ஜென்டில்மேன் ஒப்பந்தமாக இருக்கட்டும். என்றார் ராஜீவ் காந்தி.
அசோக் விடுதிக்கு நாம் போய்ச் சேரும்போது அதிகாலை மூன்று மணியாகி விட்டது. அண்ணா இருந்து பாருங்கோ இந்த இரகசிய ஒப்பந்தமும் வாக்குறுதிகளும் ஒன்றுமே நிறைவேறப் போவதில்லை. இதெல்லாம் ஒரு அரசியல் ஏமாற்று வித்தை என்று விரக்தியுடன் கூறிவிட்டு தனது அறைக்கு சென்றார் பிரபாகரன்.
சோர்ந்து களைத்து எனது அறைக்குள் சென்ற போது விழித்தபடி காத்திருந்த திலீபன் விடியும் வரை என்னைத் தூங்கவிடவில்லை. நடந்த கலந்துரையாடல் பற்றியும் ராஜீவ் பிரபா ஒப்பந்தம் பற்றியும் அவனுக்கு விளக்கிக் கூறினேன். எல்லாவற்றையும் அவதானமாகக் கேட்ட திலீபன் அண்ணா என்ன சொல்கிறார் என கேட்டான். பிரபாகரனுக்கு திருப்தியில்லை. வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்பதிலும் அவருக்கு நம்பிக்கையில்லை என்றேன். சிறிது நேரம் சிந்தித்துவிட்டு அண்ணன் நினைப்பதுதான் நடக்கும் என்றான் திலீபன். அப்படித்தான் நடந்தது. ராஜீவ் பிரபா ஒப்பந்தம் நிறைவேற்றப்படவில்லை. இடைக்கால அரசும் நிறுவப்படவில்லை.
தமிழரின் பாரம்பரிய நிலத்தில் சிங்களக் குடியேற்றம் நிறுத்தப் பட வேண்டும் தமிழ்ப் பகுதிகளில் சிங்கள அரசு காவல்துறைக நிலையங்களைத் திறக்கக் கூடாது என்ற கோரிக்கைகள் அடங்கிய - ராஜீவ் - பிரபா ஜென்டில்மேன் ஒப்பந்தத்தில் ராஜீவால் தரப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமென்ற உறுதிமொழி தரப்பட வேண்டுமெனவும் கோரி உண்ணா நோன்பிருந்து இந்திய அரசு அதற்கிணங்க மறுத்த நிலையில் உயிர் திறந்தான் திலீபன்.
போரும் சமாதானமும் நூலில் இருந்து சில பகுதிகள் - அன்ரன் பாலசிங்கம்
தமிழீழ விடுதலைப் புலிகள்
யாழ்ப்பாணம்
12.10.1987
கனம் ராஜீவ் காந்தி அவர்கள்
இந்திய பிரதம மந்திரி
புதுடில்லி
கனம் பிரதம மந்திரி அவர்களே
யாழ்ப்பாணத்தில் உருவாகியுள்ள மிகவும் ஆபத்தான பாரதூரமான நிலைமையை உங்கள் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்.
இந்திய அமைதி காக்கும் படைகள் விடுதலைப் புலிகள் இயக்கம் மீது போர்ப்பிரகடனம் செய்து இராணுவ நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளன. தற்பாதுகாப்பிற்காக எமது போராளிகளையும் பொதுமக்களையும் அழிவிலிருந்து காப்பதற்காக நாம் இந்திய சிறிலங்கா இராணுவங்களை எதிர்த்துப் போராட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம்.
மக்கள் அதரவு பெற்ற விடுதலை இயக்கமான புலிகள் இயக்கம் மீது இந்திய அரசு யுத்தம் தொடுத்துள்ளதால் எமது மக்கள் அதிர்ச்சியும் ஆழந்த கவலையும் அடைந்துள்ளனர். விடுதலைப் புலிகள் இயக்கம் மீது பிரகடனப்படுத்தப்பட்டுள்ள இந்தப் போராளது இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படைகளையே மீறுவதாக அமைந்துள்ளது. எமது கருத்தும் அதுவாகும்.
இந்தியப் படைகளும் சிறிலங்கா இராணுவமும் கூட்டாகச் சேர்ந்து மேற்கொண்டுள்ள இந்த ராணுவ நடவடிக்கை மூலம் பொது மக்களுக்கு பெருமளவு உயிர்ச் சேதம் ஏற்படும் பேராபத்து உருவாகியுள்ளது. இதனால் எழும் பாரதூரமான விளைவுகளுக்கு இந்திய அரசே பொறுப்பேற்க வேண்டும்.
இந்திய மக்கள் மீது எமக்குள்ள நல்லுறவின் அடிப்படையிலும் சமாதானமும் நல்லெண்ணமும் பேணப்படும் அவசியத்தை முன்னிட்டும் இராணுவ நடவடிக்கைகளை உடன் கைவிடும்படி இந்திய அமைதிப் படைக்குப் பணிக்குமாறு நான் உங்களை தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறேன்.
வே.பிரபாகரன்
தலைவர்
தமிழீழ விடுதலைப் புலிகள்
(2)
தலைமைச் செயலகம்
தமிழீழ விடுதலைப் புலிகள்
யாழ்ப்பாணம்
13.01.1988
கனம் ராஜீவ் காந்தி அவர்கள்
இந்திய பிரதம மந்திரி
புதுடில்லி
கனம் பிரதம மந்திரி அவர்களே
தமிழ்ப் பகுதிகளில் தொடர்ந்தும் சமாதானம் சீர்குலைந்து வன்முறை தாண்டவமாடுவதாலும் எமது மக்கள் தாங்கொணாத் துன்பத்திற்கு இலக்காகி இன்னல்படுவதாலும் இராணுவ நடவடிக்கைகளைக் கைவிட்டு சமாதானமும் இயல்பு நிலையும் திரும்பும் வகையில் சமரச முயற்சிகளை மேற்கொள்ளுமாறு நான் மீண்டும் உங்களை அன்புடன் வேண்டிக் கொள்கிறேன்.
போர் நிறுத்தம் செய்து கொள்ளப்பட்டு யுத்தம் ஆரம்பமாவதற்கு முந்திய நிலைகளுக்கு இந்திய சமாதானப் படையினர் திரும்புவதே சமாதானத்திற்கும் இயல்பு நிலைக்கும் வழிகோலுமென நாம் கருதுகிறோம். தமிழீழ மக்களும் இந்த கருத்தையே கொண்டுள்ளனர். சமாதான முயற்சியின் ஆரம்ப நடவடிக்கையாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கும்படி இலங்கை அரசைக் கேட்டுக் கொள்ளுமாறு நான் உங்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். அத்துடன் இந்திய சமாதானப் படையினரால் கைது செய்யப் பட்டு காவலில் வைக்கப்பட்டிருக்கும் எமது இயக்க உறுப்பினர்களையும் ஆதரவாளர்களையும் விடுதலை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
விடுதலைப் புலிகளுக்கும் இந்திய அரசுக்கும் மத்தியில் புதுடில்லியில் ஏற்கனவே இணக்கம் காணப்பட்ட உடன்பாட்டின் பிரகாரம் விடுதலைப் புலிகளைப் பெரும்பான்மையாகக் கொண்ட இடைக்கால நிர்வாக அரசு அமையப் பெற்றதும் நாம் எமது ஆயுதங்களை ஒப்படைப்போமென உறுதி தருகிறோம்.
நாம் உங்களுக்கு மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் குறியது போல தமிழ் மக்களின் உயிருக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட்டு தமிழ் மக்களின் நலன்கள் பேணப்படுமாயின் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை செயல்படுத்துவதற்கு எமது இயக்கம் ஒத்துழைக்கத் தயாராக இருக்கிறது என்பதையும் உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறோம்.
எமது யோசனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து சீரிய முறையில் பரிசீலனை செய்து தமிழீழத்தில் சமாதானம் நிலவவும் எமது மக்களின் துயரைத் துடைக்கவும் போர்நிறுத்தம் செய்து பேச்சுக்களைத் தொடங்க உடன் நடவடிக்கைகளை எடுப்பீர்களென நான் மனதார நம்புகிறேன்.
வே.பிரபாகரன்
தலைவர்
தமிழீழ விடுதலைப் புலிகள்
கொழுவி, எங்களை மதிக்கலைன்னா 8 மினிஸ்டர் பதவி கேட்டு வாங்க முடியுமா ?
அதுவும் அமவுண்டு வர்ர துறையா பார்த்து :))
பாராளுமன்ற ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்திருந்த தந்தை செல்வா அந்த பாரளுமன்றத்தின் அருகிலேயே சிங்கள காடையர்களால் தாக்கப்பட்டாரே
//தவறிருந்தால் மன்னியுங்கள்.. எனக்கு எல்லாம் தெரியும் என்று சொல்லவில்லை.. ‘எனக்கு தெரிந்தவரை' மட்டும்தான் நான் சொல்லிக்கொண்டிருக்கிறேன்..//
பாராளுமன்ற ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்திருந்த தந்தை செல்வா அந்த பாரளுமன்றத்தின் அருகிலேயே சிங்கள காடையர்களால் தாக்கப்பட்டாரே
Friday, January 23, 2009
//
குட் ஷாட் அரவிந்தன் - சிக்ஸர்
அகால மரணத்தை எய்திய மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தித் தமிழீழ மக்கள் ஆழ்ந்த துயரத்தில் மூழ்கிப் போய் இருக்கும் இந்தச் சோகமான சூழ்நிலையில் இந்திய அரசானது தனது அமைதி காக்கும் படைகளை அணிதிரட்டி தமிழர்களுக்கு எதிரான கொடிய யுத்தத்தை ஏவி விட்டிருக்கிறது. இந்தியாவுடன் ஒரு போர் நிகழும் எனத் தமிழ் மக்களோ அன்றி எமது போராளிகளோ கனவில் கூட கற்பனை செய்திருக்க மாட்டார்கள். இந்தியாவையே தமது பாதுகாவலராகவும் இரட்சகராகவும் எமது மக்கள் பூசித்தனது. அன்மையும் அமைதியையும் நிலைநாட்டும் கருவிகளாகவே இந்தியப் படைகளை அவர்கள் கருதினார்கள். இந்தியாவை ஒரு நட்பு சக்தியாகவும் தமக்கு ஆயுத உதவியும் புகலிடமும் தந்து தமிழீழ விடுதலைப் போரில் முக்கிய பங்கினையும் அரசியல் முக்கியத்துவத்தையும் வழங்கிய ஒரு நேச நாடாகவுமே விடுதலைப் புலிகள் இயக்கம் கருதியது. புலிகள் அமைப்புக்கு எதிராக போர் தொடுக்க இந்தியா முடிவெடுத்தது தமிழர் தேசத்தை அதிர்ச்சியிலும் ஆழ்ந்த கவலையிலும் ஆழ்த்தியது.
நம்ம தமிழ் நாட்டுல ஒரு தலைவி இருக்காங்க.அவங்க சமீபத்துல சொன்னாங்க பாருங்க ஒரு மேட்டர்.
புலிகள் வசம் இருக்க்கும் பகுதியில்தான் தமிழர்களுக்கு புலிகளால் ஆபத்தாம்.புலிகளாம் தமிழர்கள் அங்கு நிம்மதியாக வாழ முடியவில்லையாம்..
சிங்கள கட்டுப்பாட்டில் இருக்கும் யாழ்பாண தமிழர்கள் வாழ்வில் பாலும் தேனும் ஒருகிறதா..அந்த நகரமே ஒரு திறந்த வெளிச்சிறைச்சாலை போல் உள்ளதே..இந்த அம்மாவுக்கு யாராவது சொல்லகூடாதா..
[வியாழக்கிழமை, 22 சனவரி 2009, 09:36 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்]
திருகோணமலை பகுதியில் தமிழின விகிதாசாரத்தை குறைக்க இன விருத்தி வயதுடைய தமிழ் இளைஞர்களை இலக்கு வைத்து சிறிலங்கா புலனாய்வுத்துறை படுகொலை செய்து வருகிறது.
சேருவில தங்கநகர் பிரதேசத்தில் நேற்று புதன்திழமை அதிகாலை 3:30 நிமிடமளவில் இளம் குடும்பஸ்தரான தங்கநகரைச் சேர்ந்த ஒரு குழந்தையின் தந்தையான ஆனந்தராஜா சுதந்திரராஜா, அடையாளம் தெரியாத ஆயுததாரிகளினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
சேருவில் மற்றும் தம்பலகாமம் ஆகிய பிரதேசங்களில் சிறிலங்கா புலனாய்வுத்துறையினர் தமிழ் இளைஞர்களை கடத்தியும் துப்பாக்கியால் சுட்டும் கொலை செய்து வருகின்றனர்.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இந்த இரு பிரதேசங்களிலும் 14 இளைஞர்கள் கொல்லப்பட்டும் 5 பேர் கடத்தப்பட்டும் உள்ளதாக திருகோணமலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுக்களிடம் உறவினர்கள் முறையிட்டுள்ளனர்.
கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தில் தமிழர்களின் இன விகிதாசாரத்தை குறைக்கும் நோக்குடன் ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் தலைவரும் சிறிலங்கா அரசாங்கத்தின் முன்னாள் அரச தலைவருமான அமரர் ஜே.ஆர் ஜெயவர்த்தனவின் ஆட்சிக்காலத்தில் இருந்து இவ்வாறான கொலைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.//
இப்படியெல்லாம் யோசிக்க கூடியவர்களுடன்... ஒரே நாட்டில்.. உட்கார்ந்து... ம்ம்ம்...
அதாவது 1995 ஒக்டோபரில் யாழ்ப்பாணம் வலிகாமம் பகுதியிலிருந்து முழுவதுமாக வெளியேறிய மக்கள், 96 ஏப்ரலில் இராணுவம் யாழ்குடாநாடு முழுவதையும் கைப்பற்றியதை தொடர்ந்து வன்னிக்குச் செல்லும் பொருட்டு கிளாலி கரையில் குவிந்தனர்.
அந்த மக்களை இலக்கு வைத்து சிறிலங்கா படையினர் கடும் தாக்குதல்களை நடாத்திய நிலையில் கிளாலியில் குவிந்த மக்களை மீளவும் யாழ்ப்பாணத்திற்கு அதாவது இராணுவ கட்டுப்பாட்டு பகுதிகளுக்கே சென்று விடுங்கள் என புலிகளே வற்புறுத்தி அனுப்பினார்கள்.
அதாவது எப்போதும் ராணுவ நெருக்குவாரங்கள் ஏற்படும் போதெல்லாம் மக்கள் தம்மியல்பாக புலிகளின் கட்டுப் பாட்டுப் பகுதிக்கே சென்று விடுகிறார்கள் என்றும் இதற்கு இராணுவம் குறித்து அந்த மக்களுக்கு இருக்கக் கூடிய நியாயமான அச்சமுமே காரணமென்றும் சொன்னார்கள்.
0 0 0
ஐரோப்பிய தொலைக்காட்சியின் செய்தியாளர் சத்தியமூர்த்தி வன்னியிலிருந்து வழங்கிய செய்திக் குறிப்புக்கள் இவை. ஒளிப்பதிவின் இறுதியில் அவர் சொல்பவை கவனத்திற்குரியவை.
ஈழவிடுதலைப் போராட்டம் பற்றி எழுதப்படும் பதிவுகளுக்கெல்லாம் பினு்னூட்டம் எழுதும் வழக்கம் எனக்கில்லை. ஆனாலும் உங்களின் இந்தப் பதிவுக்கு எழுதவேண்டும் எனத் தோன்றியதற்குக் காரணம் சயந்தன் குறிப்பிட்ட அதேவிடயம்.
..நீங்களுமா..? ஏதொ இளைச்சா ஏதோ ஏரோப்ளேன் ஒட்டுமாமே.... பதிவுலகில் இப்போ கனக்க ஏரோப்ளேன்கள் ஓட்டப்படுது.. ஆனால் உங்களை இன்னமும் அப்படி எண்ணத் தோன்றவில்லை.
ஈழவிடுதலைப்போராட்டம் பற்றி நாங்கள் எழுதிய பதிவுகளை நீங்கள் முழுவதுமாகப் படித்தீர்களோ இல்லையோ,நீங்கள் எழுதும் பதிவுகளையெல்லாம்நாங்கள் படிக்கின்றோம் என்பதைக் கருத்திற் கொள்க..
இப்ப கனக்க புளொக்குகள் தூசு தட்டி எழுதப்படுகுது. எனக்கும் நாலைஞ்சு புளொக் இருக்கு, தூசு தட்டி நிறையவே எழுத ஆசை, ஆனால் கொப்பேகடுவ என்ற சிங்கள இராணுவத் தளபதி குண்டிக்க தந்த கொடுப்பனவால இருபத்தினாலு வருசமாகியும் குந்தியிருந்து பந்தி பந்தியா எழுதேலாமல் கிடக்கு. என்ன செய்ய..?
சயந்தன் சொன்னமாதிரி உங்களுக்கு கிடைச்சது தீட்சை அல்ல .. நல்ல குழையடி.
கொஞ்சம் விலாவாரியா சொல்லமுடியுமா ???
அரவிந்தன் உங்களுக்கு பதில் போட்டிருக்கேன்
அப்பிடியாமோ... பேந்து... ?
(பேந்து என்றால்.. பிறகு எனப்பொருள்படும் :)
என்ன சார் . ..நீங்க சுவீடனிலை ASIAN TRIUBAN வெப் சைட் நடத்திற k.t ராஜசிங்கத்தை சந்திச்சிட்டியள் போலை.. -;))
பதிவுக்கு மிக்க நன்றி. மிகவும் நல்ல பதிவு.
உங்களின் பதிவில் நீங்கள் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் பிழையானவை என்பது மட்டுமல்ல, எனக்கு இப் பதிவில் உள்ள கருத்துக்களுக்கு மாற்றுக் கருத்துக்கள் உண்டு.
இருப்பினும் நான் ஏன் இப்பதிவை நல்ல பதிவு என்று சொல்கிறேன் என்றால், நீங்கள் மட்டுமல்ல, எத்தனையோ இலட்சம் தமிழகத் தமிழர்களும், ஏன் சில ஆயிரம் ஈழத் தமிழர்கள் கூட ஏதோ இராஜீவ் காந்தி ஈழத்தமிழர்களுக்கு நல்ல தீர்வைப் பெற்றுத் தந்தார் என்றும், விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் தான் அதைக் கெடுத்தார் என்றும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
கிட்டடியில்(அண்மையில்) நண்பர் திரு அவர்கள் 'பொத்தகக் கடையில் நடந்த ஈழத் தமிழர் பற்றிய உரையாடல்' என்ற பதிவில் கூட உங்களைப் போன்ற கருத்துக் கொண்டவர்களைக் குறிப்பிட்டிருந்தார்.
ஆக, சில இந்திய/தமிழக ஊடகங்கள் செய்யும் பொய்ப் பரப்புரைகளை நம்பிச் சிலர் இப்படியான முடிவுக்கு வந்திருக்கக் கூடும்.
நீங்கள் சந்தித்த ஈழத் தமிழ் அன்பர் தகுந்த கல்வித் தகைமையோ அல்லது அரசியல் அறிவோ அனுபவமோ இல்லாதவர் என்றே எனக்கு எண்ணத் தோன்றுகிறது.
அல்லது அவர் ஈழ விடுதலைப் போராட்டத்தை எதிர்க்கும் ஈழத் தமிழராகக் கூட இருக்கலாம்.
எது எப்படி இருப்பினும், ஈழத் தமிழர்களின் போராட்டத்தை நன்கு அறிந்தவர்கள், நீங்கள் உங்கள் பதிவில் குறிப்பிட்டுள்ள கருத்துக்களுக்கு உண்மையான விளக்கம் கொடுக்கக் கடமைப்பட்டுள்ளார்கள். இதன் மூலம் ஈழப் போராட்டத்தினைப் பிழையாக விளங்கிக் கொண்டவர்கள் உண்மை நிலையை அறிந்து கொள்ள முடியும்.
உங்களின் இப் பதிவின் மூலம் ஒரு நல்ல கருத்துப் பரிமாற்றம் நடக்க வேண்டும் என்றே நான் விரும்புகிறேன்.
இப்படியான விவாதங்கள், கருத்துப் பரிமாற்றங்கள், ஈழப் போராட்டத்தினை முன்னெடுத்துச் செல்ல மிகவும் உதவும், குறிப்பாகத் தமிழக உறவுகளிடம்.
ஆகவே, ஒரு ஆக்க பூர்வமான கருத்துப் பரிமாற்றத்தை/விவாதத்தைத் துவக்கி வைத்ததற்க்காக உங்களுக்கு பல கோடி நன்றிகள்.
விடுதலைப் புலிகள் பிழையே விடவில்லை என்றோ அல்லது வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர் என்றோ நான் கூற வரவில்லை.
விடுதலைப் புலிகளின் சில செயற்பாடுகளில் எனக்கு உடன்பாடில்லை. குறிப்பாக அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் கொலை மன்னிக்க முடியாத குற்றம் என்பது என் எண்ணம்.
இருப்பினும், இன்று தமிழினம் வேற்றுமைகளைக் கடந்து விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பின்னால் அணிவகுத்து நிற்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
இப்போது, நாம் எமக்குள் பிளவுபட்டு நின்றால் சிங்கள இனவெறியர்களுக்குத்தான் சாதகம்.
தற்போது கொஞ்சம் வேலைப்பளு உள்ளதால் உங்களின் பதிவில் நீங்கள் குறிப்பிட்டுள்ள கருத்துக்களுக்கு என் மாற்றுக் கருத்துக்களை எழுத முடியவில்லை.
பின்னர் நேரம் கிடைக்கும் போது உங்களின் ஒவ்வொரு கருத்துக்கும் என் கருத்தைத் தெரிவிக்கிறேன்.
இப் பதிவிவை வாசிக்கும் சக ஈழத் தமிழர்களுக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புவது என்னவெனின், இங்கே செந்தழல் இரவி குறிப்பிட்டுள்ள கருத்துக்கள், அவரின் கருத்துகள் மட்டுமல்ல, இக் கருத்தைக் கொண்ட பல இலட்சம் தமிழகத் தமிழர்கள் உள்ளார்கள்.
ஆக, செந்தழல் இரவி மீது கோபப்படுவதை/அனுதாபப்படுவதை விடுத்து, மிகவும் பண்பாகவும் நிதானமாகவும் அவரின் கருத்துக்கு மாற்றுக் கருத்துக்களை முன் வைப்பதன் மூலம், இப்படிப் பிழையாக விளங்கிக் கொண்ட பல தமிழக உறவுகளுக்கு உண்மை நிலையைப் புரிய வைக்க முடியும்.
இதுவே எமது போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல மிகவும் உறுதுணையாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
செந்தழல் இரவி, மீண்டும் உங்களுக்கு என் நன்றிகள்.
இந்த பதிவு மற்றும் பின்னூட்ங்களின் மூலம் நிறய விஷயங்கள் (உண்மைகளை, வலிகளை) புரிந்துக்கொள்ள முடிகிறது..
These kinds of attempts will definitely shape the opinion of lots of people..
உங்கள் பதிவில் தவறாமல் பின்னூடங்களை படிக்குமாறு ஒரு வரி சேர்க்க வேண்டுகிறேன்..
நல்ல பதிவு.
இலங்கை பிரச்சினையில் தமிழக மக்களின் உண்மை நிலையை பிரதிபலிப்பதாக உங்களது இடுகை உள்ளது.
நன்றி!
And I think thats what reflects in author's thought process here.
On a different note, it is very true that, when you move out of your country on a profession or for some other reason, your perspective of the world changes lot. May be thats a seperate post on its own I guess. Would appreciate, if any bloggers who have recently migrated to a different country from India/TN, write about their perspective.
Friday, January 23, 2009
சாத்திரி அண்ணே...
நான் உண்மையிலேயே பாவம் என்பதை இங்கே பதிவுசெய்துகொள்கிறேன்.....
பதிவின் மேட்டர்களில் உள்ள பிழைகளை சுட்டிக்காடினால் மகிழ்வேன்..
மேலும் இது அனைத்தும் என்னுடைய சொந்த கருத்து ஆகும்
//
,இரவி வலைப்பதிவுலகில் நான் மதிக்கும் பலரில் நீங்களும் ஒருவர் நீங்கள் எழுதியது சொந்தக் கருத்தாக இருந்தால் அது தவறு. காரணம் ஈழத்தமிழர் வரலாற்றை நீங்கள் சரியாக படிக்கவில்லையென்பதே பொருள். சொல்லித்தந்த கருத்தாக இருந்தால் பரவாயில்லை எழுதிவிட்டுப் போங்கள். வலிகளும் இழப்புக்களும் எமக்கு புதிதல்ல இதையும் தாங்குவோம்.
அவர்கள் விரையவில்லை.எங்கட அண்ணமார்தான் விரட்டிக்கொண்டு போனவை.இல்லாட்டி பொடியங்களுக்கு மக்களின் சப்போட்டில்ல எண்டு வெளிஉலகத்துக்கு தெரிஞ்சுபோடும்.அப்பிடி சனங்கள அள்ளிக்கொண்டு போனாத்தானே நாங்களும் சனத்தோட சனமா மறைஞ்சு நிக்கலாம்.இல்லாட்டி இப்ப உந்த நாயள் வச்சிரிக்கிற மல்ரி பரலுக்கும் ஜெற் மிக்குக்கெல்லாம் தாக்குப்பிடிக்கேலாது பாருங்கோ..
//கிளாலியில் குவிந்த மக்களை மீளவும் யாழ்ப்பாணத்திற்கு அதாவது இராணுவ கட்டுப்பாட்டு பகுதிகளுக்கே சென்று விடுங்கள் என புலிகளே வற்புறுத்தி அனுப்பினார்கள்//
உண்மைதான்.புதிசாச்சேரந்த இயக்கப்பெட்டையளக்கூட ஆயுதத்த வாங்கிப்போட்டு ஓடுற அவசரத்தில விட்டுட்டுப்போட்டம்.அதுகள் அங்கால போனா ஆமியிட்ட தப்பேலாது இங்கால வன்னிக்கும் ஓடேலாம.பருத்துறைறேல சிணுங்கிக்கொண்டு நிண்டதை என்னண்டண்ணை சொல்லுறது.
//எனக்குத் தெரிந்தவையெல்லாம் எனக்குத் தெரிந்த இலங்கைத் தமிழர்கள் சொல்வதை வைத்துத்தான்//
அண்ணை வன்னில இயக்கம் ஆக்களை இயக்கத்துக்கு பிடிக்க வரேக்க சேட்டை கையிலசுரிட்டிக்கொண்டு அண்டவேயர்கூட போட நேரமில்லாம சண்டிக்கட்டோட காட்டுக்க ஓடிஒழிச்சிருப்பாங்கள் பாருங்கோ எங்கட பொடியள்.அவங்கள கேட்டா இன்னும் நல்ல கதை சொல்லுவாங்கள்.
//என்ன புலிகளும் இல்லையென்றால் ஈழத்தமிழனின் கதியை நினைத்தால் தான் தொண்டையில் துக்கம் அடைக்கிறது//
அண்ண சத்தியமாச்சொல்லுறன் இதெண்டா உண்மைதான்.அண்ணைமாரும் இல்லாட்டி சங்களவங்களுக்கு கொழுத்துத்தான் போடும்.என்ன இருந்தாலும் உள்ளுக்க நடக்கிறது எங்களோட.
நீங்கள் இதை வன்னியில இருந்து சொல்ற படியால சரியாதான் இருக்கும். ஆனா சரத் சொல்லுறார் 2000 புலிகள்தானாம் இருக்கினம். சனம்.. 4 லட்சமாம். 4 லட்சத்துக்கு முன் 2000 எம்மாத்திரம்.. தூக்கி வீசிட்டு போய்க்கொண்டே இருக்கலாம்தானே.. வன்னி சிங்கம் நீங்களாவது இதை முன்னின்று நடாத்தலாம்தானே..
இது தமிழகத்தின் பொதுப்புத்தியாக இருக்கும்பட்சத்தில் அதை மாற்றும் பொறுப்பு உங்களிடம்தான் என்பதை இங்கே பதிவு செய்கிறேன்..
உங்களை போன்றவர்களுக்கு வலி ஏற்படுத்த்தவேண்டும் என்று முன்முடிவுடன் எழுதியதல்ல இது..
மன்னிக்கவேண்டுகிறேன்
தெளிந்த, தேர்ந்த, நேர்மையான கருத்துக்கள்..
புலித்தலைமை எப்போதே இறங்கி வந்திருந்தால் ஈழத்தில் ஒருவித அதிகாரத்திலாவது தமிழ் மக்கள் இருந்திருக்கலாம்.. ஏன் புலிகளே தலைமைப் பொறுப்பிற்கு வந்திருக்கலாம்.
அவர்களுடைய ஒரே கட்சி ஆட்சி முறைதான் ஈழத்தில் இருக்க வேண்டும் என்கிற சர்வாதிகாரமும், தமிழ் மக்களுக்கு தாங்கள்தான் பிரதிநிதிகள் என்கிற போக்கும்தான் ஈழத்துப் பிரச்சினையில் அனைத்துத் தமிழர்களையும் ஒன்று சேர விடாமல் செய்துவிட்டது.
அதனை இன்றுவரையிலும் அவர்கள் உணராமல் இருக்கிறார்கள். போரில் இறந்த அத்தனை ஈழத்து இளைஞர்களும் விலை மதிக்க முடியாத சொத்துக்கள்.. அத்தனையும் வீணாகிப் போய்விட்டது.
இனியும் ஈழத்து மக்களின் அவலம் தீருவது புலிகளின் கைகளில்தான் உள்ளது.. முதல்படியை புலிகள்தான் எடுத்து வைத்தாக வேண்டும். வேறு வழியில்லை..
தெளிவான சிந்தனையுடன் எழுதப்பட்ட பதிவு. எவ்வளவோ வாய்ப்புகள் இருந்தது பிரபாகரனுக்கு, என்ன பயன் ? :-(
இப்போது உள்ள நிலைமையைப் பாருங்கள். வருத்தமாக இருக்கிறது, தமிழ் மக்களை நினைத்தால் தான், இந்தப் போருக்குப் பிறகு !!!
இந்திய தேசியத்தில் பல இனமக்கள் உள்ளமையால் ஒரு சமநிலை நிலவுகிறது.இலங்கையில் இரு இனங்களுக்குள் ஏற்பட்டுள்ள மோதல் ஆட்சியில் உள்ளவர்களுக்கு சாதகமான நிலையில் உள்ளது.
சிங்களவர்கள் தமிழர்களை சரிசமமாக நடத்தாதவரை இந்தப் பிரச்சினை தீராது.வன்னி மக்கள் சிங்கள இராணுவத்தினர் மீது நம்பிக்கை கொண்டாலே புலம் பெயர்வது நிற்கும்.பிரணாப் இதனை இராஜபக்சேயிடம் வலியுறுத்தி போர் நிறுத்தத்திற்கு அடிகோலிட்டிருக்க வேண்டும்.
புலிகளின் ஒரே தவறு தனிநபர் கொலைகள் மூலம் அவர்கள் தங்களை ஒரு பயங்கரவாத இயக்கமாக அடையாளப் படுத்திக் கொண்டதுதான். உலகநாடுகள் இன்றைய சூழலில் பயங்கரவாதத்தினை சகித்துக் கொள்ள முடியாத மனநிலையில் உள்ளன.தவிர,தங்கள் சக ஈழத்தமிழ் தலைவர்களை கொன்றதால் பின்னணிகளை அறியாத சராசரி தமிழக/இந்திய மக்கள் புலிகளை ஒரு ஐயத்துடனேயே பார்க்கிறார்கள். இதனால் அவர்களுக்கெதிரான பிரச்சாரங்கள் எளிதில் சென்றடைகின்றன.
டிசேயின் இந்த தெஹல்கா கட்டுரையின் தமிழாக்கமும் இரு சேனைகளிடையே வன்னித்தமிழர் பரிதவிப்பதாகவே கூறுகிறது.